ஈழ அகதிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் சீமான் கோரிக்கை

You are currently viewing ஈழ அகதிகளுக்கு  நிவாரணம் வழங்க வேண்டும் சீமான் கோரிக்கை

தமிழகத்தில் அகதி முகாமிலுள்ள ஈழத்தமிழர்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்க தமிழக அரசு வழிவகை செய்யவேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து நாம் தமிழர் கட்சி சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், தமிழகத்தில் ஏறத்தாழ ஒரு இலட்சத்திற்கும் அதிகமான ஈழச்சொந்தங்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள 110 அகதிகள் முகாம்களில் சுமார் 20,000 குடும்பங்களைச் சேர்ந்த 68,600க்கும் மேற்பட்டவர்களும், முகாம்களுக்கு வெளியே சுமார் 35,000 க்கு மேற்பட்டவர்களும் வாழ்ந்து வருகின்றனர். இவைத் தவிர சிறப்பு முகாம் என்கிற தடுப்பு முகாம்களிலும் ஈழத்தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களிலுள்ள குடியிருப்புகளில் பல போதிய இடவசதியின்றி நெருக்கடிமிக்கதாகவும், சுகாதாரமற்ற முறையிலும், சரியான கழிப்பிட வசதிகள் இல்லாத பழைய இடிந்த குடியிருப்புகளாகவும் உள்ளன.
எனவே, இக்குடியிருப்புகளில் நோய்த்தொற்றுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதால் தமிழக அரசு உடனடியாக முகாம்களின் சுகாதாரத்தை ஆய்வுசெய்து போதிய அடிப்படை வசதிகளை உருவாக்கித் தருவதுடன், அங்கு வாழும் ஈழத்தமிழர்களின் உடல்நலத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியது தலையாயக் கடமையாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்திற்குப் பணிபுரிய வந்த பிற மாநிலத்தவருக்குப் பேரிடர்கள் கால அத்தியாவசியப் பொருட்கள் இலவசமாக வழங்குவது குறித்து அறிவித்த தமிழக அரசு, நமது தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களுக்கு பேரிடர்கால நிவாரண உதவிகள் அளிப்பது குறித்து எவ்வித அறிவிப்பையும் இதுவரை வெளியிடாதாது மிகுந்த வேதனைக்குரியது எனவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, அகதி முகாம்களில் உடனடியாக தமிழக மறுவாழ்வுத்துறையின் மூலம் கொரோனோ நோய்த்தாக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது எனவும், தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்களில் பெரும்பான்மையோர் அன்றாடம் வேலைகளைச் செய்து வாழ்வை ஓட்டும் நிலையில்தான் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை தமிழக அரசு அமைப்புசாராத் தொழிலாளர்களுக்குத் தற்போது அறிவித்துள்ள நெருக்கடிகால நிதியுதவியை ஈழத்தமிழர்களுக்கும் வழங்கிட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அரசு அறிவித்துள்ள அனைத்து அத்தியாவசியப் பொருட்களும், நிதியுதவியும் முகாம்களில் வசிக்கும் ஈழத்தமிழர் குடும்பங்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் எனவும், மூன்று மாதங்களுக்கான இலவச எரிவாயு உருளை உள்ளிட்ட மத்திய அரசால் வழங்கப்பெறும் அத்தியாவசியப் பொருட்களுக்கான நிவாரண உதவிகள் ஈழத்தமிழர்களுக்கும் கிடைத்திடவும் தமிழக அரசு ஆவணச் செய்திட வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

அத்துடன், தமிழகச் சிறைகளிலுள்ள கைதிகளைக் கொரோனோ நோய்த்தொற்றுப் பரவுலை தடுப்பதற்காகச் சொந்தப் பிணையில் விடுவிப்பது போன்று, அடிப்படை வசதிகள் ஏதுமின்றி சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து ஈழத்தமிழர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டுமென தமிழக சீமான் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள