கனடாவில் கொரோனா தொற்றிற்கு மற்றொரு தமிழ் தம்பதிகளும் பலி!

You are currently viewing கனடாவில் கொரோனா தொற்றிற்கு மற்றொரு தமிழ் தம்பதிகளும் பலி!

நேரு ஐயா என அனைவராலும் அழைக்கப்பட்ட ஜவர்ஹர்லால்நேரு குமாரசாமி அவர்கள் செவ்வாய்க்கிழமை(14-04-2020) கொரோனாத் தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் மரணமானார். இவரது துணைவியார் ராஜேஸ்வரி நேற்று புதன்கிழமை (15-4-2020) மரணமானார்.

இவர்கள் இருவரும் ரொறன்ரோ ஸகாபறோ பகுதியில் அமைந்துள்ள மூதாளர் நீண்டகால பராமரப்பு நிலையத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில் கொரோனாத் தொற்றின் காரணமாக மரணமடைந்துள்ளனர்.

கனடாவில் கொரோனா தொற்றிற்கு மற்றொரு தமிழ் தம்பதிகளும் பலி! 1

ஜவர்ஹர்லால்நேரு அவர்கள் திரு. குமாரசாமி அன்னலெட்சுமி தம்பதிகளின் புதல்வராவார் இவர் மோதிலால்நேரு, பாலச்சந்திரன், நெப்போலியன், (சகோதரிகளின் பெயர் விபரம் கிடைக்கப் பெறவில்லை) ஆகியோரின் சகோதரராவார். கீதாஞ்சலி, சுபாஜினி ஆகிய இரு பெண் பிள்ளைகளின் தந்தையாவார்.

வல்வெட்டித்துறையில் 1932ம்ஆண்டு பிறந்த இவர் சிதம்பராக் கல்லூரியில் கல்வி கற்று இலங்கை தபால் திணைக்களத்தில் அதிபராகப் பணி புரிந்தவர்.

1980 களின் இறுதியில், கனடா வந்த நேரு அவர்கள கல்விகற்பதற்கு வயதெல்லை இல்லை என்பதற்கிணங்க தனது 67ஆம் வயதில் ரொறன்ரோ யோக் பல்கலைக் கழகத்தில் BA சிறப்புப் பட்டத்தை படித்து முடித்தார். அதன் பின்னர் அதே பல்கலைக் கழகத்தில் பிரெஞ்சு (French) மொழியையும் கற்றுத் தேறியவராவார்.

1990ஆம் ஆண்டு வல்வை நலன்புரிச்சங்கம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் தலைவராக தெரிவு செய்யப்பட்டு தனது சமூக சேவையை ஆரம்பித்த அவர் உலகத்தமிழர் இயக்கத்தில் மொழி பெயர்பாளராகப் பணியாற்றினார், என்பதுடன் உலகத்தமிழர் பத்திரிகையில் பல அரசியல் கட்டுரைகளை எழுதியதுடன் கனேடியச் செய்திகளின் தொகுப்பாளராகவும் பணியாற்றினார்.

2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரும் ‘கனடா உலகத்தமிழர்’ பத்திரிகையில் தொடர்ந்து பணியாற்றிய நேரு ஐயா அவர்கள் வயது முதிர்வின் கரணமாக தனது பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

இறக்கும் வரை தமிழ்த் தேசியத்தை நேசித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவில் கொரோனா தொற்றிற்கு மற்றொரு தமிழ் தம்பதிகளும் பலி! 2

‘கனடா உலகத்தமிழர்’ பத்திரிகை நேரு ஜயா அவர்களுக்கு தனது ஆழ்ந்த அஞ்சலியையும் இறுதி வணக்கத்தையும் தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள