காணாமல் போனவர்களில் சிலர் விசா எடுத்து வெளிநாட்டிலாம் கொக்கரிக்கின்றார் கேகெலிய!

You are currently viewing காணாமல் போனவர்களில் சிலர் விசா எடுத்து வெளிநாட்டிலாம் கொக்கரிக்கின்றார் கேகெலிய!

காணாமல் போனவர்கள் என்று கூறப்படுபவர்களில் சிலர் விசா எடுத்து வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

அத்துடன், வேறு சிலர் தங்களது வீட்டு முகவரிகளை பிழையாகக் கொடுத்து மோசடி செய்துள்ளனர் எனத் தெரிவித்துள்ள அவர், காணாமல் போனவர்கள் விடயத்தில் பல முரண்பாடுகள் உள்ளதாகவும் உண்மையான தரவுகளுடன் அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் செய்த அமைச்சர் யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தெரிவிக்கையில், “வடக்கு கிழக்கு மக்கள் 30 வருடங்களுக்கு மேலாக யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 ஆண்டுகால யுத்தம் என்பது சுலபமானதல்ல. யுத்த காலத்தின் போது காணாமல் போனவர்கள், மரணித்தவர்கள் பற்றி சில தகவல்கள் நமக்குக் கிடைத்துள்ளன.

குறிப்பாக காணாமல் போனவர்கள் என்று கூறப்படுபவர்களில் சிலர் விசா எடுத்து வெளி நாடுகளுக்குச் சென்றுள்ளனர். அதுமட்டுமல்லாது வேறு சிலர் தங்களது வீட்டு முகவரிகளை பிழையாகக் கொடுத்து மோசடி செய்துள்ளனர். எனவே இவற்றில் பல முரண்பாடுகள் உள்ளன.

எனவே, காணாமல் போனவர்கள் தொடர்பாக உண்மையாக அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும். காணாமல் போனவர்களின் விவகாரங்களைக் கையாள்வதற்கு காணாமல் போனவர்கள் பணியகம் உருவாக்கப்பட்டுள்ளது. அவற்றின் ஊடாக நாம் தகவல்களைத் திரட்டி வருகிறோம்.

குறிப்பாக, உள்நாட்டுப் போரின்போது காணாமல் போனவர்களின் எண்ணிக்கை தொடர்பாக பலவிதமான கருத்துக்கள் உள்ளன. ஒவ்வொரு விதமான அறிக்கைகள் ஒவ்வொரு தொகையைக் கூறுகின்றன. எனவே, காணாமல் போனவர்கள் தொடர்பாக வேறுபாடுகள் இருப்பதால் ஆதாரபூர்வமான அறிக்கை ஒன்று மிகவும் அவசியமான ஒன்றாகும்.

எனவே, காணாமல் போனவர்கள் விவகாரத்தில் முதலில் தரவுகள் அடிப்படையில் உண்மையான அறிக்கை ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

இதேவேளை, வடக்கு மாகாணத்தில் போர்க் காலத்தில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான உதவித் திட்டங்கள் மற்றும் உதவித் தொகை வழங்குவது தொடர்பாக கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தால் அது ஆராயப்படும்” என்றார்

பகிர்ந்துகொள்ள