கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கனடா 7.5 மில்லியன் டொலர் நிதியுதவி!

You are currently viewing கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கனடா 7.5 மில்லியன் டொலர் நிதியுதவி!

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கனடா 7.5 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கியுள்ளது. உள்ளுர் முயற்சிகளுக்கான கனேடிய நிதியுதவித் திட்டம் ஊடாக இலங்கையின் தேசிய சமாதானப் பேரவைக்கு இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினன், “ஜனாதிபதியின் கொவிட்-19 செயலணியின் சிவில் சமூகக் குழுவின் ஒரு அங்கமாக இலங்கை தேசிய சமாதானப் பேரவை உள்ளது.

மாவட்ட மட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையிலான குழுக்கள் உள்ளடங்கலாக, நாடு முழுவதும் கட்டமைக்கப்பட்ட வலையமைப்புடன், நாடு முழுவதிலும் பல மாவட்டங்களில் உலர் உணவுப் பொதிகளை தேசிய சமாதானப் பேரவை வழங்கும்.

பெரும்பாலானோருக்கு முடக்கம் மற்றும் 24 மணி நேர ஊரடங்கு என்பன பெரும் சவாலாகியுள்ள நிலையில், உதவி அதிகம் தேவைப்படுபவர்களுக்கு தேசிய சமாதானப் பேரவை உதவி வழங்கும்.

முன்னெப்போதும் இடம்பெற்றிராத இந்த உலகளாவிய நெருக்கடிக்கு பதிலளிப்பதில் இலங்கையில் தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்தின் பல்வேறு மட்டங்களைச் சேர்ந்தவர்களின் முயற்சியால் நான் ஈர்க்கப்பட்டேன்.

இந்த நோயையும் அதன் கடுமையான பொருளாதார தாக்கங்களையும் எதிர்த்துப் போராடும்போது இலகுவில் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு, கனடாவின் ஆதரவின் மூலம் உதவ எதிர்பார்க்கின்றோம்.

பல்வேறு சமூகங்களுடனும், நாடு முழுவதும் அடையாளங் காணப்பட்ட தேவைக்கு விரைவாக பதிலளிப்பதற்கு தேசிய சமாதானப் பேரவையுடன் பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைவதாகவும்“ அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பகிர்ந்துகொள்ள