கொரோனா பாதிக்காத 15 நாடுகள்: சாத்தியமானது எப்படி!

  • Post author:
You are currently viewing கொரோனா பாதிக்காத 15 நாடுகள்: சாத்தியமானது எப்படி!

உலகையே ஆட்டிப்படைத்துவரும் கொரோனா வைரஸ், 15 நாடுகளில் யாரையும் தாக்கவில்லை. அவை எந்தெந்த நாடுகள், அங்கு உள்ள நிலைமை என்ன என்ற விவரங்களை இந்தத் தொகுப்பில் காணலாம்.

உலகில் உள்ள 195 நாடுகளில் பெரும்பாலானவை கொரோனாவின் கொடூரத்தை உணர்ந்துள்ளன. இந்த சூழலில், கொரோனாவின் கால்தடம் பதிக்காத 15 நாடுகள் உள்ளன. இதன்படி, ஆசிய கண்டத்தில் வடகொரியா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளில் கொரோனா தாக்கம் இல்லை.

ஆப்பிரிக்க கண்டத்தில் லெசோத்தோ, காமரோஸ் நாடுகளில் கொரோனா பரவல் இல்லை. ஓசியானா எனப்படும் பெருங்கடல் பகுதியில் உள்ள 8 தீவுகளில் யாருக்கும் கொரோனா பரவவில்லை என்று தெரியவந்துள்ளது.

இதேபோல, மக்களின் நிரந்தர குடியேற்றம் இல்லாத அண்டார்டிகாவிலும் கொரோனா இல்லை. இந்த நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளை பார்ப்போம்.

இரண்டரை கோடி மக்கள் தொகையைக் கொண்ட வடகொரியா-வின் அண்டை நாடாக இருப்பது சீனா. பொதுவாகவே உலக நாடுகளிலிருந்து தனித்திருக்கும் வடகொரியா, கடந்த ஜனவரியிலேயே சீன எல்லையை மூடியது. வெளிநாட்டினரின் வருகைக்கு தடைவிதித்தது.

எனினும், அரசு ரகசியமாக செயல்படுவது, மோசமான சுகாதார கட்டமைப்பு, போதுமான அளவில் பரிசோதனை திறன் இல்லாதது ஆகிய காரணங்களால் வடகொரிய அரசின் தகவல்களை நம்ப முடியவில்லை என்று பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர். துருக்மெனிஸ்தான் அரசு, மார்ச் மாதத் தொடக்கத்திலேயே எல்லைப் பகுதிகளை மூடியது. சீனாவுக்கு செல்லும் விமானங்களை பிப்ரவரி தொடக்கத்திலேயே ரத்துசெய்தது. துருக்மெனிஸ்தான் சுகாதாரத் துறையின் தகவல்கள் நம்பகத்தன்மை வாய்ந்தது இல்லை என்று கூறப்படுகிறது.

தஜிகிஸ்தான் பகுதியில் பல்வேறு சந்தேக மரணங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், இவை நிமோனியாவால் ஏற்பட்டவை என்று அரசு தெரிவித்துவருகிறது. ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள லெசோத்தோ, காமரோஸ் நாடுகளிலும் கொரோனா பதிவாகவில்லை. எனினும், அண்டை நாடுகளில் நோய் பரவல் உள்ள நிலையில், உரிய சோதனை முறைகள் இல்லாததால் நோய் கண்டறியப்படாமல் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பெருங்கடல் தீவான சாலமனில் 6 லட்சம் பேர் வசிக்கின்றனர். அங்கு மார்ச் 25-ம் தேதி பொது அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. டோங்கா, வனவட்டு தீவுகள், மார்ச் மாதம் முதலே கொரோனா அதிக பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து வான்வழி மற்றும் கடல்வழியாக மக்கள் வருவதற்கு தடைவிதித்துள்ளன.

இதேபோல, சமோவா, பாலாவ், துவாலு, நவ்ரு, கிரிபதி, மார்ஷல், மிக்ரோனேசியா ஆகிய தீவுகளும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு தடைவிதித்ததால் வைரஸ் பரவல் இல்லாத நிலையை எட்டியுள்ளன.

இந்தியாவைப் பொறுத்தவரை, சிக்கிம், தாத்ரா-நாகர் ஹவேலி, டாமன் டையூ, லட்சத்தீவு ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா தாக்கம் இல்லை.

பகிர்ந்துகொள்ள