சிங்களத்தை திகைக்க வைத்த தமிழீழ வான்படை!

You are currently viewing சிங்களத்தை திகைக்க வைத்த தமிழீழ வான்படை!

கொலோனாவா மற்றும் முத்துராஜாவாலாவில் உள்ள  சிங்கள பேரினவாத எரிபொருள் சேமிப்புக் குதங்கள்  மீது 29.04.2007 அன்று  அதிகாலை 1:50 மணிக்கும், அதிகாலை 2:05 மணிக்கும்  தாக்குதல் நடத்தப்பட்டது.

சிங்களத்திற்கு பொருண்மிய நெருக்கடிகளை உண்டு பண்ணியுள்ளன. சிங்களத்தின் சுற்றுலாத்துறை பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

தமிழர்க்கெதிரான ஆக்கிரமிப்புப் போரின் அரசியல், இராணுவ மற்றும் கட்டளை மையமான கொழும்புநகர் வான் புலிகளின் குண்டு வீச்சுக்களுடன் குழம்பிப்போயுள்ளது.

பதட்டமும், பீதியும் நிறைந்த இடமாகச் சிங்களத்தின் மையபீடம் உருமாறியுள்ளது.

தமிழர் மீதான வான் தாக்குதல்களின் கோரத்தையும் அது தமிழர்களிடம் ஏற்படுத்தியுள்ள பீதியையும் சிங்கள தேசமும் அனுபவிக்கும் சூழல் பிறந்துள்ளது.

தமிழரின் விடுதலையை வென்றெடுப்பதற்காக முப்படையின் அவசியத்தைத் தலைவர் பிரபாகரன் அடிக்கடி எடுத்துரைப்பார். தரைப்படை, கடற்படை, வான்படை என்ற அந்த முப்படையையும் இன்று அவர் உருவாக்கி அவற்றை வெற்றிகரமாகச் செயற்படுத்தி வருகின்றார்.

ஒவ்வொரு படைக்கட்டுமானத்தையும் நன்கு திட்டமிட்டு, கட்டியமைத்து, சரியான நேரத்தில் அவற்றை வெளிப்படுத்திக்காட்டும் தலைவரின் அற்புதமான தலைமைத்துவச் செயற்பாட்டை இன்று உலகமே வியந்து பாராட்டிவருகின்றது.

கிழக்கு நிலத்தைக் கைப்பற்றி, வடக்கில் ஒரு படைய நெருக்கடியைப் புலிகள் இயக்கத்திற்குக் கொடுத்துவருவதாகச் சிங்கள அரசு செய்த பரப்புரையை மூன்று வான் தாக்குதல்கள் மூலம் தகர்த்தெறிந்துள்ள தலைவர் அவர்கள், தமிழரின் விடுதலைப் போராட்டத்தை ஒரு பாய்ச்சல் வளர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார்.

புலிகளிடமுள்ளது இலகுரக, மிதவேக விமானங்கள். தம்மிடமுள்ளது சக்திவாய்ந்த, அதிவேகக் குண்டுவீச்சு விமானங்கள். உயர் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் ஆயுதங்கள் என்றெல்லாம் சிங்கள அரசு பெருமைபேசி வந்தது.

ஆயினும், அதிவேகங்களையும், உயர் தொழில்நுட்பங்களையும் வான் புலிகளின் திறமையும், சாதுரியமும், அர்ப்பண உணர்வும் முறியடித்து வெற்றிவாகை சூடியுள்ளன என்பதே உண்மையாகும்.

ஒரு போரில் நவீன ஆயுதங்கள் முக்கியமான இடத்தை வகிக்கின்றன என்பது சரிதான்.

ஆயினும், ஆக்கிரமிப்பிற் கெதிரான விடுதலைப் போராட்டங்களில் நவீன ஆயுதங்கள் முதன்மைப் பாத்திரத்தை வகிக்கவில்லை.ஏனெனில் ஆக்கிரமிப்புப் போரும், விடுதலைப் போரும் பண்புரீதியாக வேறுபாடானவை.

ஆக்கிரமிப்புப் போர் பண்பின் அம்சங்களாக நவீன ஆயுதங்களும், ஆளணிப் பலமும்–பொருண்மிய பலமும் முக்கிய விடயங்களாக இருக்கும்.

ஆனால், விடுதலைப் போர் பண்பின் முதன்மை அடையாளங்களாக இலட்சியப் பற்றும்–மன உறுதியும், அர்ப்பண உணர்வுமே விளங்கும்.அதனால்தான் நவீன தொழில்நுட்பங்களையும், சக்தி வாய்ந்த அழிவாயுதங்களையும் விடுதலை வேட்கை கொண்ட போராளிகளால் வெற்றி கொள்ள முடிகின்றது.

வான் புலிகளும் அவ்வாறு தான் ஆழமான விடுதலைப் பற்றின் உந்தலால் சிறப்பான வகையில் செயல்வீரத்தை வெளிப்படுத்தி  துல்லியமான தாக்குதல்களைத் துணிகரமாக நிகழ்த்தித் தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் புது மெருகூட்டியுள்ளனர்.

தமிழருக்கு வான்படை என்ற தலைவர் பிரபாகரனின் கனவும்–அதை நனவாக்க அவர் எடுத்த பல வருட முயற்சிகளும் இப்போது செயல்வடிவம் பெற்றுள்ளன.

வரலாற்றில் முதற்தடவையாகத் தமிழினம் ஒரு வான்படையை இப்போது கொண்டுள்ளது. தரை எல்லை, கடல் எல்லை தமிழருக்கிருப்பதுபோல இப்போது வான் ஆதிக்கமும் தமிழருக்குக் கிடைத்துள்ளது.

தமிழரின் வான் பரப்பில் சிங்கள வான்படை இதுவரை காலமும் வைத்திருந்த வான் ஏகபோகம் இப்போது உடைத்தெறியப்பட்டுள்ளது.வான் புலிகளின் அடுத்த குண்டுவீச்சு எங்கே எப்போது என்று கேள்விமேல் கேள்விகேட்டு சிங்கள தேசம் அச்சமடைகின்றது.

புலிகளின் வான்தாக்குதலைத் தடுக்கும் நோக்குடன் பல்லாயிரம் கோடி ரூபா செலவு செய்து விமானங்களையும், இராணுவ தளபாடங்களையும் வாங்கச் சிங்கள அரசு நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளது.

ஏற்கனவே போர்ச்செலவால் நசுங்கிப் போயுள்ள சிங்கள அரசுக்கு இது மேன்மேலும் பொருண்மிய நெருக்கடிகளை உண்டு பண்ணப்போகின்றது.

மொத்தத்தில், வான் புலிகளின் விமானத் தாக்குதல்கள் சிங்கள தேசத்தையும் அச்சத்திற்குள்ளாக்கி, சிங்களத்தின் பொருண்மியத்தையும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

வெளியீடு :விடுதலைப்புலிகள் இதழ் (2007)

பகிர்ந்துகொள்ள