சுவிசின் இன்றைய தளர்வும் – நிபுணர்கள் விளக்கமும்!

You are currently viewing சுவிசின் இன்றைய தளர்வும் – நிபுணர்கள் விளக்கமும்!


 
உலகில் இதுவரை 4.13 மில்லியன் மக்கள் கொறோனா நோய் தொற்றுக்கு உட்பட்டுள்ளனர். 1.42 மில்லியன் மக்கள் நோயில் இருந்து மீண்டு நலன் அடைந்துள்ளனர். 283 000 மக்களைக் கொறேனா பலிகொண்டுள்ளது.
 
சுவிற்சர்லாந்து நாட்டில் 11. 05. 2020 திங்கட்கிழமை நண்பகல் வரையான சுவிற்சர்லாந்து நடுவனரசின் பதிவுகளின்படி 30 344 மக்கள் கொறோனாத் தொற்றுக்கு உட்பட்டது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுவிசில் 26 600 மக்கள் நோயிலிருந்து மீண்டுள்ளனர் அதேநேரம் 1 543 மக்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
 
நோய்த் தொற்றின் அளவு சுவிற்சர்லாந்தில் கடந்த நாட்களில் குறைவடைந்து வந்தமையாலும், சுவிற்சர்லாந்து அரசு நியமித்த நிபுணர்குழுவின் பரிந்துரை காரணமாகவும் 11. 05. 2020 திங்கட்கிழமை சுவிற்சர்லாந்து நாடு இதுவரை மூடியிருந்த கடைகள், நிறுவனங்கள், உணவங்கள், நூலகங்கள், அருங்காட்சியங்கள் தம் கதவுகளைத் திறந்துகொண்டன.
 
இயல்பான இயல்பிற்கு சுவிற்சர்லாந்து மீண்டும் திரும்புவதற்கு இன்னும் பல் படிகள் ஏற்றம் காண வேண்டி உள்ளது. இன்னும் பல் அடிகள் எடுத்து வைக்க வேண்டியுள்ளது. இருப்பினும் இன்றை தளர்வு நடவடிக்கை சுவிற்சர்லாந்தின் இயல்பு வாழ்வு நோக்கிய மிகப்பெரும் முதற்படியாக அமைந்துள்ளது.
 
சுவிற்சர்லாந்து நடுவனரசின் கொறோனா நோய்த் தொற்றுப் பேரிடர் தடுப்புக் குழுமத்தைச் சேர்ந்த சுகாதரத்துறை அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், மாநில இணைப்பாளர்கள், சுங்கத்துறை அதிகாரிகள் 11. 05. 20 ஊடகவியலாளர் ஒன்றுகூடலின் தோன்றிப் பொதுவான விளக்கம் அளித்ததுடன், ஊடகவியலாளர் கேள்விகளுக்குப் பதில் அளித்திருந்தனர்.
 

அதன் சுருக்கம் கீழே:

மருத்துவர் மற்றும் சுகாதரத்துறை அதிகாரி திரு. டானியல் கொக்

தொற்றின் புள்ளித்தரவின் வளைவு கீழ்நோக்கி வளைகின்றது. சிறந்த முன்னேற்த்திற்கு இது நல்ல சமிக்கை. இப்போது பெருந் தொற்றினைக் கட்டுப்படுத்தலும் சாத்தியமாகின்றது. சுவிற்சர்லாந்துவாழ் மக்களது ஒத்துழைப்பின் பெறுபேறு இதுவாகும். இதற்கு நாம் மக்களை வாழ்த்த வேண்டும். நோய்த்தொற்று அறிகுறி தோன்றின் கட்டயாம் மக்கள் தம்மை பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளவேண்டும். இதுவே தொற்றைக் கட்டுப்படுத்த உதவும். மேலதிக தளர்வு நடவடிக்கைகளை சுவிற்சர்லாந்து மேற்கொள்வும் இவை அடிப்படையாகும்.

இன்று முதல் மக்கள் மீண்டும் ஓரளவு சுதந்திரமாக செல்ல முடிகின்றது. இது நாம் நாளாந்த வாழ்விற்கு இயல்புடன் திருப்ப வழிசெய்யும். ஆனாலும் நாம் தொடர்ந்தும் சுவிஸ் அரசின் சுகாதரப் பரிந்துரைகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

மூதாளர் மற்றும் பராமரிப்பு இல்லங்களில் வாழ்வோரை இப்போது சென்று பார்க்கலாம். நோய்த் தொற்றிற்று ஆளாகக்கூடிய அபாயம் கொண்டோர் குழுமம் என்ற வரையறைக்கு உட்பட்டோருக்கு விதிக்கப்பட்ட இறுக்கமான விதிகளும் இன்றுமுதல் தளர்தப்படுகின்றது. அவர்களும் சுகாதர நடவடிக்கையினைக் கடைப்பிடித்து வழமைக்குத் திரும்பலாம்.

அண்டை நாடுகளில் கொறோனா நோயில் இருந்து மீண்டவர்கள் சிலர் மீண்டும் நோய்வாய்ப்படும் அறிகுறிகள் காணப்படுகின்றன. சுவிசிலும் இவ்வாறான அனுவத்தை நாம் கண்டுள்ளோம். ஆனால் அது கொறோனாவின் அறிகுறிதான என உறுதிப்படுத்தப்படவில்லை. நுண்ணுயிர்க் கொல்லிகளின் தொற்று இவ்வாறான அறிகுறிகளை வெளிப்படுத்துவது மருத்துவத்தில் இயல்பாகும். 

மாநிலங்கள் கணனிச் செயலிகளை உருவாக்கி வருகின்றன. அவை முழுமையாகப் பயன்படுத்தப்படும்போதே இதுதொடர்பில் நாம் புதிய பட்டறிவினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

பெற்றோர்கள் தமது பேரன் பேத்திகளை காணச் செல்லலாம். சுவிசில் அவர்களைச் சென்று பார்ப்பதற்கு எப்போதும் முழுமையான தடை விதிக்கப்பட்டிருக்கவில்லை. வழமையான சுகாதார நடவடிக்கைகளை பேண வேண்டுகின்றோம். இன்றை தளர்வு நடவடிக்கை ஊடாக இதுவரை சுவிஸ் அரசு மேற்கொண்டிருந்த பாதுகாப்பு நடவடிக்கையின் காரணமான எதிர்மறை விளைவு ஓரளவு குறைவது மகிழ்சியே மற்றும் இத்தளர்வின் ஊடாகப் பெருமளவில் நோய்த் தொற்று அதிகரிக்கும் என நினைக்கவில்லை.
 

 தொழிற்துறை இயக்குனர் திரு. போறிஸ் சூர்க்கெர்

சுவிசில் மொத்தமாக 37 வீதமான நிறுவனங்கள் குறைந்த நேரப் பணிகால அனுமதிக்கு விண்ணப்பித்திருந்;தன. அவர்களது ஊதியத்திற்கு மானியம் வழங்கப்படுகின்றது. இது ஒரு நல்ல சமிக்கை, ஏனெனில் இத்தனை நிறுவனங்களிடத்திலும் உள்ள பணியிடங்கள் இதன் ஊடாகக் காக்கப்பட்டுள்ளன. இதில் விருந்தோம்பல் துறையைச் சேர்ந்தோர் 76 வீதம் ஆகும். ரிச்சீனோ மாற்றும் யூறா மாநிலங்களில் பணிநேரம் குறைக்கும் நிறுவனங்களின் தொகை அண்ணளவாக சரிபாதி வீதத்திற்கு உள்ளது.

ஒவ்வொரு நிறுவனமும் உயிர்க்கொல்லியான கொறோனா பரவாது இருக்க சுவிற்சர்லர்து அரசு அறிவித்திருக்கும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தொழிலாளர்கள், வாடிக்கையாளர்கள் உரிய பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். தொழிலாளர்களை உரிய முறையில் காக்கும் பொறுப்பு வேலை வழங்கும் நிறுவனங்களுக்கு உரியதாகும். இப் பணிப்புக்களை சுவிற்சர்லாந்தின் நடுவனரசு விடுத்திருந்தாலும், இவ்விதி சரியாக ஒழுகப்படுகின்றதா எனக் கண்காணிக்கும் பொறுப்பு மாநிலங்களிடம் வழங்கப்படுகின்றது. இது தொடர்பில் புகார்கள் இருப்பின் மாநில அரசின் தொழில் ஆய்வாளர்களிடத்தில் அளிக்கலாம்.

 
சுங்கத்துறை இயக்குனர் திரு. கிறிஸ்ரியான் பொக்

இதுவரை இன்றைய தளவர்வு நடவடிக்கை காரணமாக 10 எல்லைச் சோதனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. எல்லை மூடப்பட்டது முதல் இன்றுவரை 68 000 நபர்களுக்கு சுவிசிற்குள் தற்போது உள்நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் எல்லை நாடுகளுடன் சரியாக ஒருங்கிணைப்புக்களை மேற்கொண்டு உறுதி செய்து மேலதிக எல்லைகள் திறக்கப்பட வேண்டுமா என ஆயப்படவேண்டும். 

இதுவரை 1635 நபர்கள் சுவிசிலிருந்து எல்லை நாடுகளில் பொருட்கள் வாங்கச் சென்று, சட்டத்தை மீறியதன் காரணமாக குற்றப்பணம் செலுத்தி உள்ளார்கள். எல்லைக் காப்பில் இருகும் நாம் இவ்வாறு விதிமீறுபவர்களைக் குறிவைத்து தேடவில்லை. இருப்பினும் கடந்த மார்ச் நடுப்பகுதி முதல் இன்று வரை மேற்காணும் தொகையினர் சுவிசின் அவசரகால விதிமீறியதன் பயன் தண்டிக்கப்பட்டுள்ளார்கள்.

 
பிரிகேடியர் திரு. மார்க்குஸ் நேவ்

சுவிற்சர்லாந்தின் பாதுகாப்புத்துறை பாதுகாப்பு முகமூடி உறைகளை புதிதாக இறக்குமதி செய்துள்ளது. 18 மில்லியன் முகவுறைகள் சில்லறை வர்த்தகர்களிடத்தில் கையளிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையினருக்கும் போதியளவு பாதுகாப்பு அணியுறைகள் வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளும் போதிளவு பொருட்களை முன்னெச்செரிக்கையாக களஞ்சியப்படுத்தியுள்ளது. 100 மில்லியன் சுகாதர முகவுறைகளை நடுவன் மற்றும் மாநில அரசுகள் களஞ்சியப்படுத்தி இருப்பதை உறுதிப்படுத்துகின்றோம். சுவிஸ் விமானச் சேவையுடன் இணைந்து 33 000 பறப்புக்களை சுகாதரப் பாதுகாப்பு உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் மேற்கொள்ள உள்ளோம். இதுவரை 264 மில்லியன் சுவிஸ் பிராங்குளைச் செலவு செய்துள்ளோம், 2.45 பில்லியன் வரை செலவுசெய்ய வளம் உள்ளது. இருப்பினும் நாம் செலவு உணர்ந்து செயற்படுகின்றோம்.

தொகுப்பு: சிவமகிழி

பகிர்ந்துகொள்ள