சுவிற்சர்லாந்தின் தற்போதைய நிலைமை என்ன?

You are currently viewing சுவிற்சர்லாந்தின் தற்போதைய நிலைமை என்ன?

வழமையை இழந்த சுவிற்சர்லாந்து
2020 நண்பகல் வரையான கணக்கெடுப்பின்படி 12129 மனிதர்கள் சுவிசில் கொறோனா தொற்றிற்கு உள்ளாகி உள்ளார்கள். 198 மக்கள் இந்நோய் காரணமாக இறப்பெய்தி உள்ளார்கள்.

 
சுவிற்சர்லாந்தின் 26 மாநிலங்களிலும் பன்னிரண்டு ஆயிரம் தொழிலாளர்கள் தொழில் இழந்து வருமான ஈடுபெற தொழில் இழந்தோர் காப்புறுதி ஆணையத்தில் தம்மைப் முற்பதிவு செய்துள்ளார்கள்.
 
சுவிசின் எல்லைப் பாதுகாப்பு படைக்கு 50 சுவிஸ் இராணுக் காவற்துறை உதவிக்கு வழங்கப்பட்டுள்ளது.
 
8000 இராணுவ வீரர்கள் பல் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பணிகளிலும் சுவிஸ் முழுவதும் ஈடுபடுத்தப்பட்டுவருகின்றார்கள்.
 
 
பொருளாதாரம், நிதி உதவி
 
சுவிஸ்அரசு பேரிடர் போக்க தாம் ஒதுக்கிய ஆயிரம் கோடி சுவிஸ்பிராங் நிதியை 4200 கோடியாக (CHF 42 000 000 000) அதிகரித்துள்ளது.
 
சிறுநிறுவனங்கள் பெரும் கட்டுப்பாடுகள் இல்லாமல் CHF 500 000 சுவிஸ்பிராங்குகள் வரை வங்கியில் கடனாகப் பெறுவதற்கு வாய்ப்பளிக்கப்படுகின்றது. இத்தொகைக்கு மேற்படின் 0.5வீத வட்டியில் நிறுவனங்களுக்கு கடன் அளிக்கப்படுகின்றது.
 
வீட்டுவாடகை, மற்றும் நிறுவனங்களின் வாடகையினை செலுத்துவதற்கு 90 நாட்கள் மேலதிக காலம் அளிக்கப்படுகின்றது.
 
சுவிசின் பொருளாதர அமைச்சரின் கருத்துப்படி சுவிசில் 51000 நிறுவனங்கள் 656 000 பணியாளர்களுக்கு தற்காலிக குறுகிய காலப் பணிக்கு ஒப்புதல் பெறுவதற்கு மாநிலங்களில் அமைந்துள்ள தொழிற்துறை திணைக்களத்தில் பதிவுசெய்துள்ளனர்.
 
அரசின்கருத்துக் கணிப்பின்படி சுவிசில் உள்ள சிறு நிறுவனங்களில் ஒவ்வொரு ஆறாவது நிறுவனமும் தமது தொழிலைத் துறக்க வேண்டி வரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
 
விளையாட்டுத் துறை மன்றங்களுக்கு 100 மில்லியனும், சுதந்திரமாக இயங்கும் கலைஞர்களுக்கு 280 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் சுவிஸ் அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது.
 
 
வெளிநாடுகளில் இருந்து சுவிஸ் திரும்பியோர்
 
சுவிற்சர்லாந்தின் வரலாற்றில் என்றுமில்லாதவாறு சுவிஸ் வெளிவிவகார அமைச்சின் தகவலின் படி பேரிடர் காலத்தில் தம்மை மீட்க வேண்டும் படிவத்தினை 17000 மேற்பட்டோர் தரவிறக்கம் செய்துள்ளனர். இதுவரை சிறப்பு விமானங்கள் ஊடாக 3500 பயணிகளை உலகின் பல பாகத்திலிருந்தும் சுவிசிற்கு மீள அழைத்து வரப்பட்டுள்ளனர். 
 
 
வழமை திரும்புமா? நிலமை கடினமாகுமா?
 
கொறோனாஉயிர்க்கொல்லியின் பெருந்தொற்றினைக்கட்டுக்குக் கொண்டுவருவதற்கு சுவிற்சர்லாந்தின் நடுவன் அரசும் மாநில அரசுகளும் பெரும் நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
 
ஊரடங்குச் சட்டத்தினை இதுவரை நடுவன் அரசு நடைமுறைப்படுத்தவில்லை. ஆனாலும் மக்களை வீடுகளில் இருங்கள் என விடுக்கப்படும் கோரிக்கை மென்போக்காகவே சுவிஸ் மக்களால் எடுத்துக் கொள்ளப்பட்டதாக நடுவன் அரசு கவலை தெரிவித்துள்ளது.
 
ஊரடங்கினை நடைமுறைப்படுத்தினால் சுவிஸ் பொருளாதாரத்திற்கு பெரும் நெருக்கடியினைத் தோற்றுவிக்கும் என்பதால் ஆகக்கூடியது 5 மக்களுக்கு அதிகமாக ஒன்றுகூடத் தடையும், ஒருவருக்கு ஒருவர் 2மீற்றர் இடைவெளியும் விட்டு இயங்கலாம் எனும் நடைமுறை பேரிடர் விதியாக நடுவன் அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது!
 
சுவிசின் பொருளாதரமும், பொதுமக்கள் உடல் நலனும் சுவிசில் செய்துகொண்ட புரிந்துணர்வு – விட்டுக்கொடுப்புஒப்பந்தமாக இதனை நாம் கொள்ளலாம்!
 
எதிர்வரும் காலத்தில் இரண்டாம் உலகப் போருக்குப்பின் சுவிஸ் ஊடரங்கு உத்தரவினை பிறப்பிக்கலாம் என ஐயம் தெரிவிக்கப்படுகிறது. மக்களின் மனதிற்குள் பெரும் போராட்டம் நடந்துகொண்டிருக்கின்றது. சிலருக்கு இப்போது உள்ள நடைமுறை இலகுவனதாகத் தெரிகிறது, சிலருக்கு இது கடினமாகத் தெரிகின்றது.
 
(நன்றி சிவமகிழி)

பகிர்ந்துகொள்ள