சுவீடன், பின்லாந்து சென்று வந்தவர்களும் தனிமையில் இருக்கவேண்டும்! நீதியமைச்சர் அறிவிப்பு!!

You are currently viewing சுவீடன், பின்லாந்து சென்று வந்தவர்களும் தனிமையில் இருக்கவேண்டும்! நீதியமைச்சர் அறிவிப்பு!!

நோர்வேயிலிருந்து சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு சென்று வந்தவர்களும் குறைந்தது 14 நாட்களுக்கு தனிமையில் இருப்பது அவசியமென நோர்வேயின் நீதியமைச்சர் “Monica Mæland” தெரிவித்துள்ளார்.

எனினும், தொழின்முறை காரணங்களுக்காக நோர்வே – சுவீடனுக்கிடையில் பயணப்படுபவர்களுக்கு இக்கட்டுப்பாடு பொருந்ததெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தேசிய இடர்ப்பாட்டுக்கு ஒத்ததொரு நிலை நிலவும் நேரத்தில், “கொரோனா” பரவலை கட்டுப்படுத்தவேண்டிய தேசியக்கடமைக்கு அனைத்து மக்களும் ஒத்துழைக்கவேண்டுமெனவும் நீதியமைச்சர் வேண்டியுள்ளார். தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருப்பவர்கள், அவ்வறிவுறுத்தலை கடுமையாக கடைப்பிடிக்கவேண்டுமென உறுதியாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனிமையில் இருக்கும்படி விடுக்கப்படும் அறிவுறுத்தலை மீறுபவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென நோர்வே காவல்துறை அறிவித்திருப்பதும், இதற்கான தண்டனையாக பொருளாதார தண்டமும், உச்சபட்ச தண்டனையாக 4 வருட சிறைவாசமும் கிடைக்கலாமெனவும் தெரிவிக்கப்பட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மலைவாழ் குடில்களுக்கு சென்று விடுமுறைக்காக தங்கியிருப்பவர்கள் அனைவரும் உடனடியாக வீடுகளுக்கு திரும்பவேண்டுமென உத்தரவு பிறப்பித்திருக்கும் நீதியமைச்சர், வெளிநாடுகளில் தற்காலிகமாக தங்கியிருக்கும் நோர்வே நாட்டவர்கள் அனைவரும் விரைவில் நாடு திரும்ப வேண்டுமெனவும், இதேவேளை, சட்டபூர்வமான வதிவிட அனுமதியை கொண்டிராத வெளிநாட்டவர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள