தமிழர்களின் சித்தாந்தமே விடுதலைப் புலிகளின் சித்தாந்தம்.!

You are currently viewing தமிழர்களின் சித்தாந்தமே விடுதலைப் புலிகளின் சித்தாந்தம்.!

தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழ் மக்களின் சித்தாந்தத்தையே முன்னெடுத்தார்களே தவிர புலிகளின் சித்தாந்தம் என்று எதுவும் முன்வைக்கப்படவில்லை என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சித்தாந்ததையே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முன்னெடுத்து வருகின்றனர் எனவும் அதில் தமிழ் மக்களுக்கு எவ்வித விருப்பமும் இல்லை என்றும்   கமால் குணரட்ன தெரிவித்துள்ள கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர் மேற்படி கருத்தினை வெளியிட்டுள்ளார்.

வட தமிழீழம் , யாழ்.ஊடக அமையத்தில் இன்று (புதன்கிழமை) அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், “சாம்பியா நாட்டு இராணுவத் தளபதிக்கும் இலங்கை பாதுகாப்புச் செயலாளருக்கும் இடையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாதுகாப்பு அமைச்சில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பில் சிங்கள பேரினவாத  பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் சித்தாந்தத்தை நிறைவேற்றும் நோக்கிலேயே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதில் எவ்வித விருப்பமும் இல்லை என்ற கருத்தை வெளியிட்டுள்ளார்.

அவரின் இந்தக் கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது தமிழரின் அடிப்படை சித்தாந்த உரிமைகளை கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் சித்தாந்தத்தைத்தான் முன்னெடுத்தார்களே தவிர புலிகளின் சித்தாந்தம் என்று எதுவும் முன்வைக்கப்படவில்லை. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட முன்னர் அகிம்சைப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். அது கொச்சப்படுத்தப்பட்டு புறக்கணிக்கப்பட்டமையினால் ஆயுதப் போராட்டம் தொடங்கியது.

தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைகள் தொடர்பாக பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். சூடான், பிரித்தானியா போன்ற நாடுகளில் அவ்வாறு நடைபெற்று ஒவ்வொரு அலகுகள் பிரிந்துள்ளன. போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்களில் முக்கியமான ஒருவராக இருக்கும் தற்போதைய பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகளை கொச்சப்படுத்தும் வகையில் கருத்துக்கள் வெளியிடுவதை நிறுத்த வேண்டும்.

முள்ளிவாய்க்காலில் போரை முன்னின்று நடத்திய முக்கிய படைத் தளபதியாக இருந்த கமால் குணரட்ன தமிழர்களின் அபிலாசைகளை கொச்சப்படுத்துவது கண்டனத்துக்குரியதாகும்” என்றார்.

முக்கிய குறிப்பு:
இரா. சம்பந்தர் தமிழரசுக்கட்சியின் நீண்டகால உறுப்பினர். காலம்காலமாக சிங்கள அரசு அவரிற்கு கொடுத்துவரும் சலுகைகளை அனுபவித்துவரும் இவர், தனது சலுகைகளை கைவிடமுடியாத நிலையில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை கைவிட்டு சிங்களதேசத்தின் ஆதிக்கத்தின் கீழ் தமிழர்கள் வாழவேண்டுமென்ற கொள்கையுடன் சிங்களக்கூலியாக செயற்பட்டுவருகின்றார்.

பகிர்ந்துகொள்ள