போதைப் பயன்பாட்டினால் இருவர் மரணம்!

You are currently viewing போதைப் பயன்பாட்டினால் இருவர் மரணம்!

வீதியில் மயங்கி விழுந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை உயிரிழந்துள்ளார். மன்னார் – பேசாலை பகுதியைச் சேர்ந்த சந்திரகுமார் விஜயகுமார் (வயது 23) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கடந்த 28ஆம் திகதி கொழும்பு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். இதன்போது அவர் வீதியில் மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் தலைமன்னார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். அதிக போதைவஸ்து பாவனையே மரணத்திற்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதேவேளை

அதிக ஹெரோயின் பாவனை காரணமாக யாழ்ப்பாணத்தில் இளைஞரொருவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். இருபாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த கணேசன் நிஷாந் (வயது 29) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் நேற்றிரவு உணவருந்தி விட்டு தூக்கத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டில் உள்ளவர்கள் இன்று அதிகாலை 4 மணியளவில் அவரை அவதானித்தவேளை அவர் அசைவற்று காணப்பட்டார்.

இந்நிலையில் காலை 5 மணியளவில் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின்போது, அவர் அதிக ஹெரோயின் பாவனை காரணமாக உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.

அண்மைய காலமாக யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு போதைப் பயன்பாடு காரணமாக பலரும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments