போராட்டங்களுக்கு தடை போடும் சிறீலங்கா காவற்துறையின் அராஜகத்தை மீண்டும் கண்டிக்கிறோம்!

You are currently viewing போராட்டங்களுக்கு தடை போடும் சிறீலங்கா காவற்துறையின் அராஜகத்தை மீண்டும் கண்டிக்கிறோம்!

மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சல் தரைகள் மீதான சிங்கள குடியேற்ற ஆக்கிரமிப்பையும், தொடர்ந்து இடம்பெறும் கால்நடைகளின் உயிர் கொலைகளை கண்டித்தும் பாதிக்கப்பட்ட பண்ணையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் மட்டக்களப்புக்கு சென்ற எமது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று (05.11.2023) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

50 ஆவது நாளாக தொடரும் பண்ணையாளர்களின் போராட்ட களத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுடன் கிழக்குப் பல்கலைக்க மாணவர்களும் ஒன்றிணைந்து இந்தப் ஆதரவுப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

போராட்டம் முடிந்து யாழ்ப்பாணத்துக்கு வரும் வீதியில், பல்கலைக்கழக மாணவர்களின் பேருந்தை மறித்த பொலிஸார், மாணவர்களின் விபரங்களை கோரி அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.

பின்னர் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி 6 மாணவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து இழுத்துச்சென்றுள்ளனர். ஜனாநாயக ரீதியில் போராட்டத்தை முன்னெடுத்த மாணவர்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட பொலிஸாரின் இந்த அத்துமீறல் செயற்பாட்டை யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வன்மையாகக் கண்டிக்கிறது.தமிழர்கள் மீது இனவாதத்தை கக்கும் பிக்குவின் செயற்பாடுகளுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்க முன்வராத சிறீலங்கா காவற்துறையின், பாதிக்கப்பட்ட பண்ணையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்த மாணவர்கள் மீது வன்மத்தை காட்டியுள்ளனர்.

தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவாதத்தை எதிர்க்கும் இளம் சமுதாயத்தை பயமுறுத்தி அடக்கி ஒடுக்கும் செயற்பாடாகவே நாம் இதைப்பார்க்கிறோம்.

கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் என்பதுடன் ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கு தடை போடும் பொலிஸாரின் அராஜகத்தை மீண்டும் கண்டிக்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்களை கைதுசெய்து சிறைகளில் அடைப்பதன் மூலம் எங்களது செயற்பாடுகளை கட்டுப்படுத்தலாம் என்பதை இலங்கையின் காவல்துறை கவனவிலும் நினைத்துப்பார்க்கமுடியாது என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் நிர்வாக உறுப்பினர் சிவகஜன் தெரிவித்துள்ளார்.

ஏறாவூர் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணைகளை தொடர்ந்து நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,யாழ்.பல்கலைக்கழகமும் கிழக்கு பல்கலைக்கழகமும் ஒன்றாகவே பயணிக்கும். இலங்கை காவல்துறையின் அச்சுறுத்தலுக்கு ஒருபோதும் அடிபணியமாட்டோம்.

இவ்வாறான அச்சுறுத்தல்கள் மூலம் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இங்கு வரமாட்டார்கள் என்று என்னுகின்றார்கள். அது ஒருபோதும் நடைபெறாது என்பதையும் இலங்கை அரசாங்கத்திற்கு சொல்லிக்கொள்ளவிரும்புகின்றோம்.

அச்சுறுத்தல்களுக்கு அடிபணியும் பாரம்பரியம் கிழக்கு பல்கலைக்கழத்திலும் இல்லை யாழ் பல்கலைக்கழகத்திலும் இல்லையென்பதை மாணவர்கள் சமூகமாக சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments