போருக்கு தயாராக இருங்கள் ; ஷி ஜின்பிங் (Xi Jinping) உத்தரவு!

  • Post author:
You are currently viewing போருக்கு தயாராக இருங்கள் ; ஷி ஜின்பிங் (Xi Jinping) உத்தரவு!

கொரோனா விவகாரத்தில் சீனா மீது அமெரிக்கா தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், சர்ச்சைக்குரிய தென்சீன கடல்பகுதியிலும், தைவான் நீரிணை பகுதியிலும் அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேவேளை போருக்கு தயாராகுமாறும், நாட்டின் இறையாண்மையை காக்க உறுதியுடன் செயல்பட வேண்டும் என்றும் சீன ராணுவத்திற்கு அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் (Xi Jinping) உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, இந்திய – சீன எல்லைப்பகுதியான லடாக் அருகே இருநாட்டு ராணுவத்தினருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இதையடுத்து இருநாடுகளும் லடாக் எல்லைப்பகுதிளில் படைகளை குவித்து வருகின்றன. லடாக்கின் பாங்கோங் ஏரியில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சீன ராணுவ விமானத்தளம் விரிவாக்கம் செய்யப்பட்டு, போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ள செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் சீன ராணுவ அதிகாரிகள் பங்கேற்ற வருடாந்திர நாடாளுமன்ற கூட்டம் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய சீன அதிபர் ஷி ஜின்பிங் (Xi Jinping), கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு ஏற்பட உள்ள நிலைமைகள் குறித்து விளக்கினார். மேலும் சீன படைகளுக்கான பயிற்சிகளை அதிகரிக்க வேண்டும் என்றும், போருக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

எத்தகைய சிக்கலான சூழ்நிலை வந்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என்றும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு இடையூறாக உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

போர் பயிற்சிகளை தீவிரப்படுத்துமாறு அறிவுறுத்தியிருந்தாலும், ஷி ஜின்பிங் எந்த நாட்டின் பெயரையும் குறிப்பிட்டு பேசவில்லை. எனினும் அண்மையில் சீனாவின் ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீடு 6,6 விழுக்காடு அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளதும், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi), அமெரிக்கா குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள