மருதனார்மடம் சந்தை தொற்றாளரின் உறவினர்கள் ஆறு பேருக்கு கொரோனா தொற்று!

You are currently viewing மருதனார்மடம் சந்தை தொற்றாளரின் உறவினர்கள் ஆறு பேருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணம், மருதனார் மடம் சந்தை வியாபாரியுடன் தொடர்புடைய ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர், த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மருதனார் மடம் சந்தையில் 394 பேரிடம் இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே இவ்வாறு ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இன்று பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மாதிரிகளில் போதுமான கூறுகள் இல்லாமையால் அவர்களிடம் மீளவும் மாதிரிகள் பெறப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், மருதனார்மடம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஏழாக உயர்வடைந்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்ட குடும்பத்தலைவரின் மனைவி (வயது-38), மகள் (வயது-12), மகன்கள் (6 மற்றும் 3 வயதுடைய) இருவர், மாமியார் (வயது-63) மற்றும் மைத்துனர் (வயது-25) ஆகியோருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடுமுழுவதும் எழுமாறாக தெரிவு செய்யப்படுவோரிடம் பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதனடிப்படையில், உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிப்பில் மருதனார்மடம் சந்தி முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் உள்ள சாரதிகளிடம் கடந்த புதன்கிழமை மாதிரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

அந்தப் பரிசோதனையின் முடிவில் மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரியாகவும் முச்சக்கர வண்டி சாரதியாகவும் உள்ள 38 வயதுடைய குடும்பத் தலைவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்றிரவு கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, அவர் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்பட்டதுடன் அவரது குடும்பம் உடுவில் பிரதேச சபை ஒழுங்கையில் உள்ள அவர்களது வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரனின் அறிவுறுத்தலில் மருதனார்மடம் பொதுச் சந்தை மற்றும் அதனைச் சூழவுள்ள வியாபார நிலையங்களில் உள்ளவர்கள் என 394 பேரிடம் இன்று காலை மாதிரிகள் பெறப்பட்டன.

இதையடுத்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட நிலையில் ஆறு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ். மருதனார் மடம் சந்தையில் 31 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், ஆறு பேருக்கே தொற்று உள்ளமையை வைத்தியர் சத்தியமூர்த்தி உறுதிப்படுத்தியுள்ளார்.

பகிர்ந்துகொள்ள