மாமனிதர் தராக்கி சிவராம் நினைவுகள்!

You are currently viewing மாமனிதர் தராக்கி சிவராம் நினைவுகள்!

சிவராம் படுகொலை செய்யப்பட்டபோது அப்போதைய தமிழ்த்தேசிய குரலை அடக்கவே அவர் கொலை செய்யப்ட்டதாக பலரும் நம்பினோம்.

இப்போது திரும்பிப் பார்க்கும்போதுதான் இன அழிப்பு அரசும் அனைத்துலக சக்திகளும் ஒன்றிணைந்து தூர நோக்கில் அந்தப் படுகொலையை நிகழ்த்தியதை புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.
தமிழ்த் தேசியத் தளத்தில் இதுவரை அவரைப்போன்ற தீர்க்க தரிசனம் மிகுந்த கருத்துக்களை இதுவரை யாரும் முன்வைத்ததில்லை.

அவர் படுகொலை செய்யப்பட்ட காலத்திற்கும் தற்போது இருக்கும் காலத்திற்கும் இடையில் வரலாறே தலைகீழாக மாறி நிற்கிறது. ஆனால் இப்போதும் அவரது ஆய்வுகள் சமகால வரலாற்றுக்கு அமைவாக எழுதப்பட்டிருப்பதை நாம் பிரமிப்புடன் பார்க்க கூடியதாக இருக்கிறது.

எத்தனை ஆய்வாளர்களின், அறிஞர்களின், புலமையாளர்களின் ஆய்வுகள் பொய்த்துப்போனதும் நேரத்திற்கு ஏற்றமாதிரி தமது தாளலயங்களை மாற்றிக்கொள்ளும் கபடத்தனத்தையும் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் சூழலில் வாழ்கிறோம். சிவராம் இவர்களிடமிருந்து வேறுபட்டு தனித்துவமாக அன்றுமட்டுமல்ல இன்றும் நிற்கிறார்.

தமிழ்த்தேசியத்தின் சொத்து சிவராம்என்றால் அது மிகையல்ல.

இனஅழிப்பு நோக்கங்கங்களுடன் சிங்கள அரசு மட்டுமல்ல எமக்குள்ளிருந்துகூட வரலாற்றை மறைக்கவும் திரிக்கவும் பலர் களமிறங்கியிருக்கிற சூழலில் சிவராமின் இன்மை முன்பைவிட தற்போதுதான் எம்மை நிலைகுலையச் செய்கிறது.
இனஅழிப்பு அரசும் அனைத்துலக நாசகார சக்திகளும் தூர நோக்கில் அவரை இலக்கு வைத்ததன் காரணத்தை இப்போதுதான் நாம் முழுமையாக உணர முடிகிறது.

தராகி சிவராம் தமிழர் தேசத்திற்கு எதிரான அனைத்துலக நகர்வின் தாக்குதல் திட்டமான ‘ புரொஜக்ட; பெக்கன்’ குறித்து முதல் முதலாக எச்சரித்தவர் மட்டுமல்ல அந்த புரொஜெக்டின் ஒரு இலக்காக இருந்து, அதன் வழி கொல்லப்பட்டவரும் கூட.

புரொஜெக்ட் பெக்கன். (Project Beacon)

புரிந்துணர்வு உடன்படிக்கையை அடுத்து 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஓஸ்லோவில் அனைத்துலக மற்றும் பிராந்திய சக்திகள் ஒன்றிணைந்து புரொஜெக்ட் பெக்கான் திட்டம் இறுதிப்படுத்தப்பட்டது.

புரிந்துணர்வு உடன்படிக்கையினூடாக தமிழர் சேனைகளை அழித்தொழிக்கும் நயவஞ்சக நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இணைத்தலைமை நாடுகள் குறித்து நாம் எல்லோரும் அறிந்திருக்கிறோம். இந்த இணைத்தலைமை நாடுகளும் குறிப்பாக அமெரிக்கா மற்றும் இந்தியா சிங்களத்துடன் இணைந்து வரைந்த திட்டம்தான் புரொஜெக்ட் பெக்கன்.( Project Beacon)

இந்த நாசகாரத் திட்டம் குறித்து புலிகளே வெளிப்படையாக அறிவித்தார்கள். தாம் இந்த திட்டத்தின்படி 2009 இற்கு முன்பே அழித்தொழிக்கப்படுவோம் என்றும் அதுவும் கரையோரமாக நிலங்களை இழந்து புதுக்குடியிருப்பு நிலப்பபகுதிக்குள் வைத்து அழித்தொழிக்கப்படுவோம் என்பதை 2007 இலேயே தமது செயற்பாட்டாளர்களுக்கும் 2008 இல் பகிரங்கமாகவும் அறிவித்தார்கள்.

ஆனால் இங்கு பலரும் வசதியாக அனைத்தையும் மறந்து விடுகிறார்கள். இவ்வளவையும் உணர்ந்த புலிகள் ஏன் மாற்று வழி தேடவில்லை?. என்ற கேள்விக்கு இங்கு விடை பகிர நாம் முன்வரவில்லை. ஏனென்றால் எல்லாவற்றையும் உணர்ந்த புலிகள் தம் அழிவை முன்னுணர்ந்து பிராந்திய – பூகோள சதிக்கு எதிராக தமிழர் தேசம் சார்ந்து நடத்திய பகடையாட்டம் அது. அதை ஒரு வரியில் விளக்கம் செய்ய முடியாது.

புலத்தில் தமிழ்த்தேசிய செயற்பாடுகளை முடக்குதல், புலிகளின் அனைத்துலக ஆயுத மற்றும் அரசியல் கட்டமைப்புக்களை உடைத்தல், தாயகத்தில் புலிகளை மக்களிடம் இருந்து வேறுபடுத்துதல், இறுதியாக புலிகளை படைத்துறைரீதியாக அழித்தொழிப்பு செய்தல் ஆகிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் தமிழர் தேசத்திற்கு எதிரான அனைத்துலக நகர்வின் தாக்குதல் திட்டத்தின் பெயர்தான் ‘ புரொஜக்ட பெக்கன்’.

தமிழீழம் என்ற நடைமுறை அரசையும் (de facto state) அதன் மக்களையும் இனஅழிப்பு செய்ய புரொஜெக்கட் பெக்கன் திட்டம் எப்படி வரையப்பட்டதோ அதே போன்று தமது அழிவின் பின்னரும் கூட எஞ்சியுள்ள தமிழ்த்தேச அரசியலையும் நிர்மூலம் செய்ய எமக்குள்ளிருந்தே தமிழ் அரசியல்வாதிகளையும் மேட்டுக்குடி கனவான் அரசியல் செய்வர்களையும் வைத்து ஒரு புரெஜெக்ட் வரையப்படும் என்பதையும் புலிகள் முன்கூட்டியே அறிவித்துவிட்டுத்தான் சென்றிருக்கிறார்கள்.

அதுதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இதைத்தான் ‘ஒப்பரேசன் புரொஜெக்ட் பெக்கன் 2’ என்று நாம் வரையறுக்கிறோம். இதற்கான வரைபுகள் தயார் செய்யப்பட்டு மேற்குலக ஆசியுடன் பிராந்திய சதியின் (இந்தியா) துணையுடன் சிங்களத்தால் எமக்குள்ளிருந்தே விலைபோன கும்பல்களின் துணையுடன் சிங்கப்பூர் மற்றும் தென்னாபிரிக்காவில் வைத்து அது இறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
நாம் இங்கு பேச வந்த விடயம் அதுவல்ல.

புலிகளை அழிப்பது மட்டுமல்ல புலிகளின் தொடர்ச்சி அல்லது புலிகளின் லொபி என்று அடையாளம் காணப்பட்டவர்களும் இந்த திட்டத்தின் பிரகாரம் அழித்தொழிககப்பட்டார்கள் என்பது தற்போது புலனாகிறது.
உதாரணம் தராகி சிவராம், இன்னொருவர் ஜோசப் பரராஜசிங்கம்.

முன்னையவர் புலிகள் எதிர்கொள்ளும் போர்க்குற்றச்சாட்டுக்களை மறுதலிக்கும் இராணுவ மூலோபாய அறிவுத் தர்க்கங்களை கொண்டவராக இருந்தார். அடுத்தவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியலை புலிகளின் தொடர்ச்சியாக காவும் வல்லமை கொண்டவராக இருந்தார்.

இரண்டுமே எதிரிகளுக்கு உவப்பான ஒன்றல்ல. விளைவு, அழித்தொழிக்கப்ட்டார்கள்.

தராக்கி சிவராம் அவர்களது நினைவு நாளில் புலிகள் எதிர் கொள்ளும் ஒரு குற்றச்சாட்டு குறித்து மட்டும் ஒரு விளக்கத்தை பதிவு செய்வதே இந்த பத்தியின் நோக்கம். அதுதான் அவருக்கான அஞ்சலியும் கூட.

மனிதக் கேடயம். (human shield )

இந்த புரொஜெக்ட் பெக்கன் திட்டத்தின் முக்கிய ஒரு செயற்பாடாக புலிகளை போர்க்குற்றவாளிகளாக்கும் ஒரு வரைபு இருக்கிறது. 2005 இலேயே புரிந்துணர்வு உடன்படிக்கை முறிந்து பேர் வெடிக்க முன்பே புரொஜெக்ட் பெக்கன் திட்டத்தில் இந்த பகுதியை கொண்டு வந்த சாணக்கியத்தனத்தை நாம் வியக்காமல் இருக்க முடியாது. ஒரு நடைமுறை அரசை அழிப்பதென்றால் சும்மாவா?

இனி விடயத்தை பார்ப்போம். வெளியக அடிப்படையில் புலிகளை பயங்கரவாதிகள் முத்திரை குத்தி அழித்த பிற்பாடு நிலத்தில் புலிகளையும் மக்களையும் வேறுபடுத்தும் நோக்குடன் பெக்கான் திட்டம் புலிகளின் கட்டுப் பாட்டில் இருந்த நிலப்பரப்பை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது.

புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிலப்பரப்பு மூன்று கடலோரப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. ஒரு ஆண்டுக்கு ஒரு பிரிவு வீதம் மூன்று ஆண்டுகளில் (2006-2009) மொத்த நிலப்பரப்பையும் கைப்பற்ற வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது அப்படியே நடந்தும் முடிந்தன. அப்போது மக்கள் புலிகளோடு சென்று ஒரு குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்குவார்கள் என்றும் அப்போது இராணுவத்தினருக்கும் புலிகளுக்கும் இடையில் இருக்கும் மக்களை ‘மனிதக்கேடயம்’ என்ற அடிப்படையில் பிரித்து புலிகளை போர்க்குற்றவாளிகளாக்க முடியும் என்று திட்டம் தீட்டப்பட்டது. அப்படியே நடந்தும் முடிந்தது.

புலிகளை மக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்தவில்லை. அப்படி ஒரு சிந்தனையும் இல்லாத, போரே தொடங்காத ஒரு காலப்பகுதியில் ரோக்கியோவிலும் பின்பு ஒஸ்லோவிலும் வைத்து இந்த ‘மனிதக் கேடயம’; human shield ) என்ற பதத்தை பயன்படுத்தியதே இந்த புரொஜெக்ட் பெக்கான் திட்டத்தை வரைந்த சதிக் கூட்டணிதான்.

இதை சிவராம் அறிந்திருந்தார். புலிகளுக்கு உடனடியாக அதை தெரியப்படுத்தியும் இருந்தார்.

இந்த உண்மை எத்தனை பேருக்கு தெரியும்? அந்த திட்டத்தின் பிரகாரமாகவே இன்று புலிகள் மனிதக் கேடய குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார்கள். எந்த அரசியல் – இராணுவ புரிதலுமின்றி குறிப்பாக நிலப்பரப்பு குறித்த புரிதலின்றி இதை வாந்தியாக எடுக்கும் நமது மனித உரிமைவாதிகள், ஜனநாயகவாதிகள், ஆய்வாளர்கள் அரசியல்வாதிகளை என்னவென்று சொல்வது?

இதன் விளைவாக மாமனிதர் சிவராம் கொல்லப்பட்டது கூட இந்த பெக்கன் திட்டத்தின் ஒரு பகுதிதான் என்பதை மிகத் தாமதமாகவே நாம் அறிந்து கொண்டோம். ஏனென்றால் அவர் இருந்திருந்தால் புலிகள் எதிர்கொள்ளும் இந்த மனிதக் கேடயக் குற்றச்சாட்டை இராணுவ விஞ்ஞான அடிப்படையில் மட்டுமல்ல அவரிடமிருந்த ஆவணங்களின் பிரகாரம் பெக்கான் திட்ட வரைபையும் முன்வைத்து அம்பலப்படுத்தியிருப்பார்.

எப்படியெல்லாம் நுட்பமாகப் பார்த்து புரொஜெக்ட் பெக்கன் திட்டம் வரையப்பட்டு, தமிழின அழிப்பு நடந்து முடிந்து, ‘தமிழீழ நடைமுறை அரசு’ அழிக்கப்பட்டது என்பதை மக்கள் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்.

சிவராம் ‘மனிதக் கேடயம்’ தொடர்பாக எச்சரித்து அனுப்பிய ஆவணங்கள் இன்று யாரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை. நாம் தேடிக் களைத்து விட்டோம். புலிகளின் தலைமைச் செயலகத்தில் இருந்த அந்த ஆவணங்கள் நந்திக்கடலில் ஏனைய ஆவணங்களுடன் எரித்து சாம்பலாக்கப்பட்டுவிட்டன.

அந்த தகவல்களை அறிந்தவர்கள் என்று நாம் நம்புபவர்கள் இன்று எதிர் முகாமுக்குள் அடைக்கலமாகிவிட்டார்கள். இந்த இனத்தின் பாவ – சாபக் கதை இது.

நந்திக்கடல் கோட்பாடுகள்.

அரச பயங்கரவாதத்திற்கெதிரான விடுதலைப் போராட்டம், புரட்சிகர வன்முறை, மக்கள் போராட்டம் குறித்த எந்த வித புரிதலுமின்றி ஒடுக்கப்பட்ட அடக்கப்பட்ட இனங்களின் போராட்டங்களை பயங்கரவாத அரசுகள் ‘சர்வதேச உறவுகள்’, ‘பிராந்திய பூகோள நலன்கள்’ என்ற வகைமைக்குள் பொருத்தி எப்படி அழித்தொழித்து வருகின்றன என்ற தர்க்க அறிவுகூட இல்லாமல் எமக்குள்ளிருந்தே புலிகளை குற்றவாளிகளாக்கும் போக்கு இருக்கிறது. இந்த இடத்தில்தான் சிவராம் போன்றோரின் இழப்பு எம்மை நிலைகுலையச் செய்கிறது.

ஆனால் அதை ‘நந்திக்கடல்’ தர்க்க நியாயங்களுடன் மறுதலிப்பது மட்டுமல்ல ஒரு உலாகளாவிய கோட்பாடாகவும் முன்வைக்கிறது.

போராடும் இனங்களையும் அவர்களின் போராட்ட பிரதிநிதிகளையும் பிரித்தாளும் தந்திரங்கள் குறித்து நிறையவே எச்சரிக்கிறது ‘நந்திக்கடல்’.

ஒரு வரலாற்று நாயகனின் சாட்சியாக – உளவியலாக இறுதிக் காலங்களில் மக்களுக்கும் புலிகளுக்கும்; இடையில் நிகழ்ந்த ஊடாட்டத்தை அறம் சார்ந்து விபரிப்பது மட்டுமல்ல, ‘மனிதக் கேடயம்’ என்ற பயங்கரவாத அரசுகளின் அயோக்கிய சொல்லாடலான அறம் மீறிய இராணுவ தந்திரோபாயத்தையும் அம்பலப்படுத்துகிறது ‘நந்திக்கடல்’.

இதன் வழி தமிழினத்திற்கான விடுதலைச் சூத்திரத்தை மட்டுமல்ல உலகளாவிய ஒடுக்கப்பட்ட இனங்களின் விடுதலைக் கோட்பாடுகளை முன்வைத்து வரலாற்றில் தனது இடத்தை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது ‘நந்திக்கடல்’.

✍பரணி கிருஸ்ணரஜனி

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments