மாயமான 14 வயது சிறுமி வவுனியாவில் மீட்பு: உடனிருந்த இளைஞர் கைது!

You are currently viewing மாயமான 14 வயது சிறுமி வவுனியாவில் மீட்பு: உடனிருந்த இளைஞர் கைது!

காணாமல் போன 14 வயதுடைய சிறுமி ஒருவர் வவுனியா, நாகர் இலுப்பைக்குளம் பகுதியிலுள்ள வீடு ஒன்றிலிருந்து  மீட்கப்பட்டதுடன், உடனிருந்த 18 வயது இளைஞன் ஒருவரும் வவுனியா சிறீலங்கா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உடப்புஸ்ஸலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒல்டிமார் தும்பவத்தை தோட்டத்தில் வசிக்கும் சிறுமி ஒருவரை காணவில்லை என கடந்த 03ஆம் திகதி அன்று குறித்த சிறுமியின் குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டதுடன், சமூக வலைத்தளத்திலும் சிறுமியின் புகைப்படத்தினை பிரசுரித்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று (10.11.2023) மதியம் அச் சிறுமி வவுனியா, நாகர்இலுப்பைக்குளம் பகுதியில் இளைஞருடன் தங்கிருந்தமையினை அவதானித்த அயலவர்கள் அப்பகுதி கிராம சேவையாளருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் கிராம சேவையாளருடன் பொதுமக்கள், பொலிஸார், சிவில் அமைப்புக்கள், பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் இணைந்து குறித்த வீட்டுக்கு சென்று சிறுமியை மீட்டு வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

சிறுமியிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தானும், அவ் இளைஞனும் தொலைபேசியூடாக காதலித்ததாகவும் அவருடன் வாழ ஆசைப்பட்டு தான் இங்கே வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஆரம்ப கட்ட விசாரணைகளின் பின்னர் சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 18 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டு சிறீலங்கா பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments