ரவிகரன், சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நால்வர் மீதான வழக்குவிசாரணை ஒத்திவைப்பு!

You are currently viewing ரவிகரன், சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நால்வர் மீதான வழக்குவிசாரணை ஒத்திவைப்பு!

கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதம் முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியினை அபகரிக்கச் சென்ற நில அளவீட்டாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோட்டாபாய கடற்படை முகாமிற்கு முன்பாக மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்கள் மற்றும் மதிப்புறு எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை 30.11.2020 இன்றையநாள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.இவ்வாறு இன்றைய நாள் எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் 2021ஆம் ஆண்டு மேமாதம் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதம் 22 ஆம் திகதி, முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில், கோட்டாபய கடற்படை முகாமிற்கு முன்பாக இடம்பெற்ற காணி அபகரிப்பிற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதற்காக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் அவர்கள் 28.02.2018அன்று முல்லைத்தீவு போலீசாரால் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், பின்னர் பிணையில் விடுதலையாகியிருந்தார்.இதேவேளை, வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள் முன் பிணைகோரி, சட்டத்தரணி ஊடாக பிணையில் வெளிவந்தார்.அதனைத்தொடர்ந்து இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணியைச் சேர்ந்த அன்ரனி ஜெகநாதன் பீற்றர்இளஞ்செழியன், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளன நிர்வாக உறுப்பினர் அன்னலிங்கம் சண்முகலிங்கம் ஆகியோரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.இவ்வாறாக நால்வர் மீதும் தொடரப்பட்ட வழக்கின் விசாரணைகள் கடந்த இரண்டரை வருடங்களுக்கு மேலாக இடம்பெற்றுவரும் நிலையில், 30.11.2020 இன்றைய நாள் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில், நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன.இன்றைய வழக்கு விசாரணைகளில் நில அளவைத் திணைக்களத்தினால் குற்றஞ்சாட்டப்பட்டோர் சார்பில், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் அவர்கள் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள், அ.பீற்றர் இளஞ்செழியன், அ.சண்முகலிங்கம் ஆகிய நால்வரும் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.இதேவேளை இவர்களுக்கு ஆதரவாக நீதிமன்றில் அனைத்து சட்டவாளர்களும் முன்னிலையாகியிருந்தனர்.இந்நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து இந்த வழக்குடன் தொடர்புடைய அறிக்கை இன்னும் கிடைககப்பெறாமையால், குறித்த வழக்கின் விசாரணைகள் எதிர்வரும் 2021ஆம் ஆண்டு மேமாதம் 17ஆம் திகதிக்கு தவணையிடப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பகிர்ந்துகொள்ள