வடகிழக்கில் வேறு வேறு சம்பவங்களில் மூவர் உயிரிழப்பு!

You are currently viewing வடகிழக்கில் வேறு வேறு சம்பவங்களில் மூவர் உயிரிழப்பு!

வவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் உயிரிழப்பு 

வவுனியா(Vavuniya) சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (31.03.2024) இடம்பெற்றுள்ளது.

ஜாஎல பகுதியைச் சேர்ந்த 34 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குற்றச் செயல் ஒன்று தொடர்பில் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில், வைத்தியசாலையில் குறித்த கைதிக்கு சிகிச்சை வழங்கப்பட்ட போதும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

மாரடைப்பு காரணமாகவே குறித்த மரணம் இடம்பெற்றுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா சிறீலங்கா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மட்டி எடுக்க கடலுக்குள் சென்றவர் மூழ்கி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மட்டி எடுப்பதற்காக கடலுக்கு சென்ற இளைஞன் , கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு பெரியகல்லாறு ஓடக்கரையைச் சேர்ந்த 19 வயதான ரவீந்திரன் யதுசன் என்பவரே உயிரிழந்தார்.

கொழும்புத்துறை கடற்பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டி எடுப்பதற்கு கடலுக்குள் சென்றவர் காணாமல் போன நிலையில் இன்று திங்கட்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் சிறீலங்கா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

யாழ் ஆலயமொன்றில் தேங்காய் உடைத்த நபர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் தேங்காய் உடைத்துவிட்டு வந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சின்னத்தம்பி அர்ஜீனன் என்ற 68 வயதானவரே  இவ்வாறு உயிரிழந்தவராவார்.

ஆலயமொன்றுக்கு தேங்காய் உடைத்துவிட்டு வந்த முதியவர் இயலாத நிலையில் வரம்பொன்றில் அமர்ந்த நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

உடற்கூற்றுப் பரிசோதனையில் இறப்புக்கான காரணம் தெரியவரும் என கூறப்படுகின்றது.

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments