வலிக்கிறது தமிழா!

You are currently viewing வலிக்கிறது தமிழா!

இனத்தை அழித்தவனுக்கு
மனிதநேய முகத்திரை போர்த்தி
வாழ்த்து தெரிவிக்கும்
வள்ளலே வா!

தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள்
கக்கித்துப்பிய தணல்களில்
தப்பிப்பிழைத்த தருணங்களின்
கோரத்தினை நினைத்துப்பார்!

உன் கண்ணுக்கு முன்னால்
பெண்ணின் மார்பகங்களை
கிழித்துப்போட்டு காமவேட்டையாடிய
காமினிக்களின் கோரக்குரல்
உன் உதிரத்தில் உறைக்கவில்லையா?

முப்படை கொண்டு மூர்க்கத்தனமாக
எங்கள் முதியவர்களையும் குழந்தைகளையும்
குதறியெறிந்தது உன் மெய்யறிவில்
வலிக்கவில்லையா?

நாகரீக உலகத்தில் போர்வெறிகொண்டு
புத்தநெறி மறந்து யுத்த விமானங்களால்
கொத்துக்கொத்தாக உன் இனம் வீழ்த்தப்பட்ட
தன்மான உணர்வு தகிக்கவில்லையா?

மனிதச் சதைகள் சிதைந்து துண்டங்களாக
துடிக்கும் கணங்களில் மனம் நடுங்க உடல்களை
கடந்து வந்த வலிகள் வதைக்கவில்லையா?

பதினொரு ஆண்டுகளுக்குள் சதிகாரர்களை
சரித்திரவான்களாய் விசித்திரமாய் பேச
உதிரம் கொதித்தெழுகிறது!

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்
பல்லாயிரம் தமிழுயிர்களை பலியெடுத்த
பாதகர்கள் கொரேனாவை வைத்து
வெள்ளையடிக்க முனைகின்றார்கள்!

உன் தாயின் கழுத்தறுத்தவன் மனிதநேய
முகத்திரை அணிந்து தன் சுயரூபத்தை
மறைக்கத் துடிக்கிறான்!

மயங்காதே தமிழா!
எம் இனத்தை அழித்தவனோடு
இசையாதே தமிழா!

✍தூயவன்

பகிர்ந்துகொள்ள