இராணுவ பொலிஸ் பாதுகாப்பிற்குள் முல்லைத்தீவு! அச்சத்தில் மக்கள்!

You are currently viewing இராணுவ பொலிஸ் பாதுகாப்பிற்குள் முல்லைத்தீவு! அச்சத்தில் மக்கள்!

வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதி எங்கும் நாளைய தினம் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் தற்போது நீதிமன்றங்களினால் குறித்த நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் 6 பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய 46 பேருக்கு தடை உத்தரவுகள் வழங்கப்பட்டு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை பொது வெளியில் செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பகுதிகள் எங்கும் இராணுவத்தினரின் பிரசன்னமும், பொலிசாரின் பிரசன்னமும் அதிகரித்துக் காணப்படுகின்றமை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை செய்ய முற்படுகின்ற மாவீரர் துயிலும் இல்ல வளாகங்கள் மற்றும் வழமையான நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறுகின்ற இடங்களில் ஆயுதம் தாங்கிய பொலிசார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு நகர்ப் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஏற்கனவே இருந்த இராணுவ சோதனைச் சாவடிகளை விட விசேடமாக பொலிஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினரும் ரோந்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

வழமையைவிட அண்மை நாட்களாக இராணுவத்தினரின் சோதனை நடவடிக்கைகள் மற்றும் ரோந்து நடவடிக்கைகள், மோட்டார் சைக்கிள் பவனிகள் என மக்களை அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடுகள் ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில் மக்கள் அச்ச உணர்வுடன் நடமாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான நகர் பகுதிகளில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் முல்லைத்தீவு கடற்கரையில் வழமையாக நினைவேந்தல் நிகழ்வு செய்யப்படுகின்ற நிலையில் கடற்கரையில் பொலிஸ் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

நகர் பகுதிகளில் வீதிகளிலேயே இராணுவத்தினரின் ரோந்து நடவடிக்கைகளும் சுமார் 10க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் இராணுவத்தினர் வீதிகள் எங்கும் உலா வருகின்ற நிலையில் மக்களை அச்சுறுத்தும் விதமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்த செயற்பாடுகளுக்கு வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் கண்டனம் வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள