உங்களுடன் நாங்கள் இருக்கிறோம்!!

You are currently viewing உங்களுடன் நாங்கள் இருக்கிறோம்!!

உயிர் கொடுத்து வளர்த்த விடுதலைப்பயிருக்கு உரங்களாய் இருந்த எம் புலம்பெயர் உறவுகளே !

பன்னாடுகளில் அகதிகளாய் அலைந்தபடி அந்தந்த நாடுகளின் பொருளாதார சமூக வாழ்வியலோடு தினமும் போராடியபடி ஒரு புறத்தில் குடும்பச்சுமையை சுமந்தபடி தங்களுடைய இனிமையான இளமைக்காலத்தினை பிறருக்காக அர்ப்பணித்து தாய் மண்ணையும் தமிழ் மக்களையும் சதா காதலித்து இந்த மண்ணின் விடுதலைக்காகவும் மக்களின் மீட்சிக்காகவும் தொடர்ச்சியாக அளப்பரிய தியாகங்களை புரிந்து கொண்டிருப்பவர்கள் நீங்கள் அத்தகைய உங்களின் அளப்பரிய தியாகங்களை வெறும்வார்த்தைகளால் இலகுவில் கடந்துவிடமுடியாது

தாயக தேசம் 2009 ற்கு முற்பட்ட காலங்களில்எதிர்கொண்ட ஒரு நாட்டிற்கு எதிரான மிகப்பெரிய போரையும் தமிழ்மக்கள் மீது ஸ்ரீலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட பொருளாதார தடைகளையும் மிகக்கச்சிதமாக எதிர்கொண்டு போரியல் ரீதியிலும் தன்னிறைவுப்பொருளாதாரத்திலும் நாம் அடைந்த ஒவ்வொரு வெற்றிகளின் பின்னாலும் உங்கள் வியர்வை துளிகளின் உப்பே சுவறிக்கிடக்கின்றது

2009 ம் ஆண்டின் நடுப்பகுதியில் நாம் வகைதொகையின்றி அழிக்கப்பட்டுக்கொண்டிருந்த போது பன்னாடுகளிலும் இலங்கையின் தூதுவராலயங்களை முற்றுகையிட்டும் ஐநா சபை முன்றலில் ஒன்றாய் அணிதிரண்டும் அந்தந்த நாடுகளின் பாராளுமன்றங்களிற்கு முன்னாலும் மிகப்பெரிய சாலை மறியல்கள் மூலமும் அனைத்து உறவுகளும் வீதிகளிற்கு வந்து எங்களுக்காய் துடியாய் துடித்ததையும் எங்களிற்காய் உங்கள் உயிர்களை தற்கொடை புரிந்ததையும் இந்த நேரத்தில் கண்ணீருடன் நினைத்துப்பார்க்கிறோம்

இலங்கையில் நடந்த மனிதகுலத்திற்கு எதிரான மிகப்பெரிய இனப்படுகொலைக்கு நீதிவேண்டி ஒவ்வொரு வருடமும் ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு முன்னாலும் ஐநா மனித உரிமை கள் பேரவையிலும் ஒன்றாய் குரல்கொடுக்கும் உங்கள் அதிர்வலைகளின் பிரதிபலிப்பில் தான் இன்னும் எமது நெஞ்சங்களில் நம்பிக்கை துளிர்விடுகின்றது

போருக்குப் பிந்திய காலகட்டத்தில் ஒழுங்கான நிதிக்கட்டமைப்புக்கள் தளத்தில் இல்லாத போதும் உங்களால் முடிந்த அத்தனை வழிகளிலும் மாவீரர் குடும்பங்கள் மாற்றுத்திறனாளிகள் பெண்தலைமைத்துவக்குடும்பங்கள் முன்னாள் போராளிகள் காணாமல் போகச்செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் மிகவும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்கள் என முப்பது வருடங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கி நின்று அன்றாட வாழ்க்கையோடு போராடிய பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு கோடிக்கணக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கி தேசத்தின் எதிர்கால தூண்களான மாணவச்செல்வங்களின் கல்விக்கு ஒளியூட்டி இயற்கை பேரிடர்களில் எல்லாம் நாம் துவண்டு விழுந்த போது உடனடியாகவே எமக்கு கைகொடுத்து #covid_19 னால் நீங்கள் கடுமையான உயிரிழப்புக்களையும் வேலை இழப்புக்களையும் சந்தித்த பின்னும் covid 19 னால் தாயகத்தில் என் மக்கள் துன்பப்படுகின்றார்களே என துடிதுடித்து அள்ளிக்கொடுக்கின்றீர்களே நீங்கள் தான் உண்மையில் நடமாடும் தெய்வங்கள்

Covid_19 என்னும் கொடிய வைரஸ்ஸில் இருந்து உங்களை நீங்களே தற்காத்துக்கொள்ள மாவீரர்களின் புனித ஆத்மா உங்களை வழி நடத்தட்டும் புலம் தளம் தமிழகம் ஒன்றினைந்து இனத்தின் விடுதலைக்காகவும் கொடிய கொள்ளை நோயில் இருந்து முற்றாக விடுதலை பெறவும் தொடர்ச்சியாக போராடுவோம் இந்த வேளையில் covid_19 நோய்க்கு ஆளாகி உயிரிழந்த பலநூற்றுக்கணக்கான புலம்பெயர் உறவுகளுக்காகவும் தாயகமக்களின் இதயபூர்வமான அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கிறோம்

நன்றி வணக்கம்

திலகநாதன் கிந்துஜன்
முல்லைமாவட்ட செயலாளர்
தமிழ்த்தேசியமக்கள் முன்னணி

பகிர்ந்துகொள்ள