சாந்தனின் கொலைக்கு இலங்கை அரசும் உடந்தை!

You are currently viewing சாந்தனின் கொலைக்கு இலங்கை அரசும் உடந்தை!

இலங்கையை சேர்ந்தவர்களை இந்திய நீதிமன்றம் விடுதலை செய்த பின்னரும் சிறப்பு முகாம் எனும் சித்திரவதை முகாமுக்குள் அடைத்து வைத்திருப்பதை இலங்கை அரசும் அறிந்திருந்தும் அறியாதது போல், சாந்தனின் கொலைக்கு உடந்தையாக இருந்தது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக்கப்பட்டு 30 வருட சிறை வாழ்வை அனுபவித்தவர்களை இந்திய உச்ச நீதிமன்றம் விடுவித்த போதும் அவர்களின் சுதந்திரத்தை பறித்த இந்திய மத்திய மற்றும் தமிழக மாநில அரசுகள் தமது அரசியல் வன்மத்தை தீர்த்துக் கொள்வதற்காக மீண்டும் அவர்களை சிறப்பு முகாம் எனும் சித்திரவதை முகாமுக்குள் அடைத்து வைத்ததோடு குறிப்பாக சாந்தன் தான் நேசித்த தாய் நிலத்தை காண வேண்டும் எனும் எதிர்பார்ப்பையும், அவர் தாய் மற்றும் சகோதர உறவுகள் மீது வைத்திருந்த அவரின் அன்பு பாசத்தையும், மகனை காண வேண்டும் அரவணைக்க வேண்டும் எனும் தாயின் அன்பு பாச உணர்வுகளையும் ஒருங்கே கொலை செய்துள்ளன.

இதனை இந்தியாவின் தர்ம சக்கரமும் காந்திய கொள்கையும் எந்த வகையில் அங்கீகரிக்கப் போகின்றன.இந்திய மத்திய மற்றும் தமிழக மாநில அரசுகளின் வன்ம பன்மை கொலையினை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வன்மையாக கண்டிப்பதோடு சிறப்பு முகாம் எனும் சித்திரை வதை முகாமிலிருந்து ஏனையவர்களையும் உடனடியாக விடுவித்து தனது தார்மீக நீதி கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பதோடு சாந்தனின் தாய் மற்றும் உறவுகளோடு துயர் பகிர்ந்து அரசியல் களப்போராளி சாந்தனுக்கு வீர வணக்கத்தையும் தெரிவிக்கின்றது.

இலங்கையை சேர்ந்தவர்களை இந்திய நீதிமன்றம் விடுதலை செய்த பின்னரும் சிறப்பு முகாம் எனும் சித்திரவதை முகாமுக்குள் அடைத்து வைத்திருப்பதை இலங்கை அரசும் அறிந்திருந்தும் அறியாதது போல் சாந்தனின் கொலைக்கு உடந்தையாக இருந்தது. மேலும் “தங்களை விடுவிக்க வேண்டும்” என்று பெப்ரவரி மாதத்தின் ஆரம்பத்திலேயே உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பித்திருக்கின்றார்கள். இவர்களின் விடுதலையை இந்திய தமிழக மற்றும் ஈழ தமிழ் உணர்வுமிக்க எந்த ஒரு அரசியல் சக்திகளும் துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அரசியல் நாடகமாடினர். அவர்களும் சேர்ந்தே சாந்தனை கொலை செய்திருக்கின்றனர். இவர்களும் குற்றவாளிகளே.

சாந்தனின் தாய் தன்னுடைய மகனின் விடுதலைக்காக போகாத கோயில்கள் இல்லை. வேண்டாத தெய்வங்கள் இல்லை. பதில் கிடைக்காத நிலையில் தமிழர் தாயக அரசியலுக்கு எதிரான அரசியல்வாதிகளிடமும் விடுதலைக்காக வேண்டி நின்றார்.இவர்களும் துரித நடவடிக்கைக்கு இலங்கை இந்திய அரசுகளை பலவந்தப்படுத்தவில்லை. சாந்தனின் கொலைக்கு இவர்களும் பதில் சொல்ல வேண்டியவர்களே.

உச்சநீதிமன்றம் விடுவித்த பின்னரும் சட்டத்தை காரணம் காட்டி சிறப்பு முகாமுக்குள் தள்ளி நோய் நிலைக்குள் வீழ்த்தி சாந்தனை கொலை செய்தவர்கள் ஏனையவர்களையும் கொலை செய்யப் போகின்றார்களா என்று கேட்கின்றோம். உண்ணாவிரதம் இருந்து காந்தீய வழியில் கோரிக்கைகளை முன்வைத்த திலீபனை கொலை (1987) செய்தவர்கள் தொடர்ந்து யுத்தம் என்ற போர்வையில் நூற்றுக்கணக்காணக்கானோரை கொன்று குவித்தனர். பெண்களை விதவைகளாக்கினர். பலரின் வாழ்வை மிதித்தழித்தனர்.அதே வரிசையில் தற்போது சாந்தனையும் கொலை செய்துள்ளனர். இவர்களிடத்திருந்து அரசியல் நீதியை இனியும் எதிர்பார்க்க முடியுமா?

பூகோள அரசியல் சூழ்நிலையில் தமிழர்கள் மீது நல்லெண்ண அடையாளத்தை வெளிப்படுத்த சாந்தன் உள்ளிட்டோரை நீதிமன்றம் விடுதலை செய்த உடனேயே சுதந்திரமான நடமாட்டத்திற்கு இடமளித்து அவர்கள் போக வேண்டிய இடங்களுக்கு செல்வதற்கு அவர்களுக்கான பயண ஒழுங்குகளை துரிதப்படுத்தி இருக்கலாம்.ஆனால் அதனை நிறைவேற்ற தவறியது ஏன்?

அரசியல் போராளிகள் எதற்கும் துணிந்தவர்கள் அவர்கள் சிறை கூடத்தையும் சித்திரக்கூடமாக காண்பார்கள் அதனை அரசியல் ஆன்மீகத்தின் பயிற்சியை களமாக்கி மகிழ்வார்கள் தமது விடுதலையை விட தாம் நேசித்த மண்ணின் மக்களின் விடுதலையை நேசிப்பார்கள் அவர்களின் உயிர் மூச்சு அதுவாகவே இருக்கும் உயிர் மூச்சுக்கு மரணம் கிடையாது களமாடி வீர மரணம் அடைந்து மாவீரர்களின் உயிர் மூச்சோடு சாந்தனின் உயிர் மூச்சும் கலந்துவிட்டது. இவ் உயிர் மூச்சும் தமிழர் தாயக விடுதலை அரசியலுக்கு பெரும் உந்து சக்தியாகவே இருக்கும்.

ஆயிரமாயிரம் போராளிகள் தாய் மண்ணிற்காக உயிர் தியாகமாகியுள்ளனர் . அவர்களின் வரிசையிலே சாந்தனும் உள்ளடங்குவார். இவரின் வாழ்வின் இறுதி நிகழ்வுகளில் எவரும் கட்சி அரசியல் செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதுவே தாயக அரசியல் விடுதலைப் பயணத்திற்கு வலு சேர்க்கும் என்பதோடு எதிரிகளுக்கு எமது சக்தியை காட்டவும் துணை செய்யும். என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments