பிணங்களை மூட்டைகளில் அள்ள வேண்டிய நிலை வரும்!உலக சுகாதார மையம்

You are currently viewing பிணங்களை மூட்டைகளில் அள்ள வேண்டிய நிலை வரும்!உலக சுகாதார மையம்

கொரோனாவிற்கு எதிராக அரசியல் செய்து கொண்டு இருந்தால், உலகம் முழுக்க பிணங்களை மூட்டைகளில் அள்ள வேண்டிய நிலை வரும் என்று உலக சுகாதார மையத்தின் இயக்குனர் டெட்ராஸ் ஆதனாம் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவி வரும் நிலையில் அமெரிக்காவிற்கும் உலக சுகாதார மையத்திற்கும் இடையில் கடுமையான சண்டை வந்துள்ளது.

ஜனாதிபதி டிரம்ப் கடந்த இரண்டு நாட்களாக கொடுத்த பேட்டிதான் இந்த சண்டைக்கு காரணம். இந்த இரண்டு பேட்டிக்கும் தற்போது உலக சுகாதார மையத்தின் இயக்குனர் டெட்ராஸ் ஆதனாம் தெரிவித்துள்ள பதில் சண்டையை அதிகப்படுத்தி உள்ளது.

டிரம்ப் முதலில் அளித்த பேட்டியில், உலக சுகாதார மையம் பல தவறான முடிவுகளை எடுத்து வருகிறது. பல தவறான விடயங்களை பேசி வருகிறது. அவர்கள் சீனாவை ஆதரிக்கிறார்கள்.

நாங்கள் உலக சுகாதார மையத்திற்கு கொடுக்கும் நிதியை நிறுத்தி வைக்க முடிவு செய்து இருக்கிறோம். மிக கடுமையான நடவடிக்கையை நாங்கள் எடுக்க போகிறோம் என கூறினார்.

பின்னர் மீண்டும் பேசிய டிரம்ப், உலக சுகாதார மையம் வரிசையாக தவறான முடிவுகளை எடுத்து வருகிறது. அது உலக நாடுகளை ஒரே மாதிரி பார்க்கவில்லை. சீனாவிற்கு அந்த அமைப்பு அதிக முக்கியத்துவம் தருகிறது. சீனா சொன்னதை அப்படியே உலக சுகாதார மையம் கேட்கிறது.

கடந்த வருடம் மட்டும் 452 மில்லயன் டொலர் பணம் கொடுத்தோம். சீனா எவ்வளவு கொடுத்தது தெரியுமா? சீனா வெறும் 42 மில்லியன் டொலர் தான் கொடுத்தது என கடுமையாக விமர்சித்தார்.

இந்த இரண்டு விமர்சனங்களுக்கும் தற்போது உலக சுகாதார மையத்தின் இயக்குனர் டெட்ராஸ் ஆதனாம் பதில் அளித்துள்ளார். அதில், கொரோனாவை வைத்து அரசியல் செய்ய கூடாது.

அமெரிக்காவும், சீனாவும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது. நாம் மிக மோசமான எதிரியை எதிர்கொண்டு இருக்கிறோம். இந்த நேரத்தில் உலக அரசியலை சூடாக்குவது சரியானது கிடையாது.

இப்போது போய் நெருப்போடு விளையாட கூடாது. உலக அரசியலிலும், தேசிய அரசியலும் சண்டை ஏற்பட்டால் பெரிய பிளவு ஏற்படும். இந்த பிளவு வழியாகத்தான் கொரோனா உள்ளே வரும்.

அங்குதான் கொரோனா வெற்றிபெறும். ஏற்கனவே 60 ஆயிரம் பேருக்கும் அதிகமாக இறந்துவிட்டனர். முதலில் அதை புரிந்து கொள்ளுங்கள், என்று டெட்ராஸ் ஆதனாம் குறிப்பிட்டார்.

டிரம்ப்பின் எச்சரிக்கை குறித்த கேள்விக்கு பதில் அளித்த டெட்ராஸ் ஆதனாம், நாம் இங்கு அரசியல் செய்வதை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் மூட்டைகளில் பிணங்களை அள்ளும் நிலை வரும்.

உங்களுக்கு உங்கள் நாட்டில் அதிக பிண மூட்டைகள் வேண்டும் என்றால், இதை வைத்து அரசியல் செய்யுங்கள். இல்லையென்றால் அரசியல் செய்வதை நிறுத்திவிட்டு உடனே களமிறங்கி பணியாற்றுங்கள்.

எங்கள் பக்கம் இருக்கும் தவறுகளை நாங்கள் ஆராய்ந்து அதை திருத்திக் கொள்வோம். கொரோனா குறித்து நாம் தெரிந்து கொள்ளாத விடயங்கள் இருக்கிறது.

நாம் பிறரை குற்றஞ்சாட்டி நேரத்தை போக்கிக் கொண்டு இருக்க கூடாது. ஒற்றுமை மட்டும்தான் இந்த கொரோனவை எதிர்கொள்ள ஒரே வழி என கூறியுள்ளார்.

பகிர்ந்துகொள்ள