பிரபல நடிகர் டனியல் பாலாஜி மாரடைப்பு காரணமாகக் காலமானார்.

You are currently viewing பிரபல நடிகர் டனியல் பாலாஜி மாரடைப்பு காரணமாகக் காலமானார்.

‘வேட்டையாடு விளையாடு’, ‘காக்க காக்க’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலமாக அறியப்பட்ட பிரபல நடிகர் டேனியல் பாலாஜி வெள்ளிக்கிழமை (மார்ச் 29) இரவு மாரடைப்பு காரணமாகக் காலமானார். அவருக்கு வயது 48. அவருடைய கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளன.

’சித்தி’ எனும் பிரபலமான தொலைக்காட்சி தொடர் மூலம் அறிமுகமானவர் டேனியல் பாலாஜி. பாலாஜி என்பதுதான் அவருடைய இயற்பெயர். ஆனால், சித்தி தொடரில் ‘டேனியல்’ எனும் கதாபாத்திரத்தில் நடித்ததால், டேனியல் பாலாஜி எனத் தன் பெயரை மாற்றிக்கொண்டார்.

இவர், 2003இல் ‘ஏப்ரல் மாதத்தில்’ எனும் திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். அதே ஆண்டில், கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘காக்க காக்க’ திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து காவல்துறை அதிகாரியாக நடித்துப் பிரபலமானார் டேனியல் பாலாஜி.

காக்க காக்க’ திரைப்படத்திற்குப் பின்னர் கௌதம் மேனன் இயக்கத்தில் அடுத்தடுத்த சில திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் டேனியல் பாலாஜியை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அவரை நடிக்க வைக்க முடியவில்லை. பல முயற்சிகளுக்குப் பின்னரே ‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படத்தில் வில்லனாக நடிக்க வைக்க கௌதம் மேனன் முடிவெடுத்துள்ளார்.

”கமலுக்கு வில்லனாக பாலாஜியா?” என அப்போது பலரும் பேசியதாக டேனியல் பாலாஜி நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். எனினும், தன் மீது நம்பிக்கை வைத்து கௌதம் மேனன் அந்தக் கதாபாத்திரத்தைத் தனக்கு வழங்கியதாக அவர் கூறினார்.

‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படத்தில் அமுதன் எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார். இதில், தன்னுடைய தனித்துவமான நடிப்பால், பெரும் புகழை அடைந்தார். அத்திரைப்படத்தில் தன் வசன உச்சரிப்பு, உடல் மொழி ஆகியவற்றுக்காக இன்றும் அறியப்படுகிறார்.

சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அவரும் கௌதம் மேனனும் இணைந்து வழங்கிய நேர்காணலில், வேட்டையாடு விளையாடு திரைப்படத்தின் வசனத்தை அப்படியே பேசிக் காட்டினார். அப்போது, “இப்போதும் அதேபோன்று வசனத்தை ஒத்திகை இல்லாமல் பேச முடிகிறதென்றால் இவர் ஒரு (திறமையான) நடிகர்,” என கௌதம் கூறியிருந்தார்.

தொடர்ந்து, வெற்றிமாறன் இயக்கத்தில் ’பொல்லாதவன்’ திரைப்படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார். இதன்மூலம், தமிழ் சினிமாவில் தனித்துவமான வில்லன் நடிகராக அறியப்பட்டார் டேனியல் பாலாஜி.

வில்லன் நடிகராக அறியப்பட்ட டேனியல் பாலாஜி, அதன்பின் பல படங்களில் நடித்திருந்தாலும் அந்தத் திரைப்படங்கள் பெரியளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2017இல் பைரவா, 2018இல் வட சென்னை, 2019இல் பிகில் போன்ற திரைப்படங்களின் மூலம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்தார் டேனியல் பாலாஜி. எனினும், அதன் பின்னும் அவருக்குப் பட வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை.

‘வட சென்னை’ திரைப்படத்தில் ‘லைப்-அ தொலைச்சிட்டியேடா’ என்று கூறும் வசனம் சமூக ஊடகங்களில் பிரபலமான ‘மீம்’ வசனமாக உள்ளது.

அதேபோன்று, சில தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள திரைப்படங்களிலும் டேனியல் பாலாஜி நடித்துள்ளார். படங்களில் நடிப்பதைத் தாண்டி சில திரைப்படங்களில் ஒப்பனைக் கலைஞராகவும் கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டில் வெளியான ’அறியவன்’ எனும் திரப்படம் அவர் நடித்த கடைசி திரைப்படம் எனத் தெரிகிறது. இவர் மறைந்த நடிகர் முரளியின் உறவினராவார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments