மருதனார்மட கொத்தணியால் இதுவரை 76 பேருக்கு தொற்று!

You are currently viewing மருதனார்மட கொத்தணியால் இதுவரை 76 பேருக்கு தொற்று!

மருதனார்மடத்தில் பரவ ஆரம்பித்த கொரோனா தொற்று, சுன்னாகம், சங்கானை, திருநெல்வேலி சந்தைகளிற்கும் பரவியுள்ளது.

இது மேலும் பரவ வாய்ப்புள்ளதால் முன்னேற்பாடாக சந்தைகள் மூடப்பட்டுள்ளன. மருதனார்மட சந்தையுடன் தொடர்புடைய 76 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

வடமாகாணத்தில் யாழ்.போதனா வைத்தியசாலை, பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 588 பி.சி.ஆர் மாதிரிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டன. இதில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

யாழ் மாவட்டத்தில் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேருக்கும், நல்லூர், சண்டிலிப்பாய், தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலிருந்து தலா ஒவ்வொருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

இதில் இரண்டு பேர் சுன்னாகம் சந்தையில் வர்த்தகர்களாக உள்ளனர். ஏனைய 3 பேரும், கொரோனா தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். பண்டாரநாயக்க விமான நிலைய ஆய்வுகூடத்திற்கு அனுப்பப்பட்ட 325 மாதிரிகளின் முடிவுகள் நேற்று காலை கிடைத்தன.

இதில் திருநெல்வேலி சந்தை வியாபாரியொருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார். அவர் கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்தவர். முல்லேரியா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட 204 மாதிரிகளின் முடிவுகளும் கிடைத்துள்ளன. அதில் யாருக்கும் தொற்று இல்லை.

மேலும் மருதனார்மடம் சந்தையுடன் தொடர்புடைய 110 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உடுவில் பிரதேசத்தைச் சேர்ந்த இருவருக்கு தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திலிருந்து இதுவரை வடமாகாணத்தில் 90 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த 78 பேர், கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த 2 பேர், வவுனியா மாவட்டத்தை சேர்ந்த 9 பேர், மன்னார் மாவட்டத்தை சேர்ந்த 1பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ் மாவட்டத்தில் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேரை தவிர ஏனைய 74 பேரும், மருதனார்மட சந்தை பரமபலுடன் தொடர்பில் உள்ளவர்கள். மருதனார்மட சந்தை பரம்பலை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்து பொதுச் சந்தைகளிலும் பி.சி.ஆர் சோதனை நடத்தினோம். இதுவரை மருதனார்மடம், சங்கானை, சுன்னாகம், திருநெல்வேலி ஆகியவற்றில் தொற்று உறுதியாகியுள்ளது.

பொதுச் சந்தைகளிற்குள் தொற்று ஏற்பட்டு மக்களிற்கு தொற்று பரவலாம். பரம்பலை கட்டுப்படுத்த, வடக்கிலுள்ள அனைத்து பொதுச் சந்தைகளையும் மூட சிபாரிசு செய்துள்ளோம். தொற்று கட்டுக்குள் வந்ததும், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சந்தைகளை ஆரம்பிக்கலாம் என்றார்.

பகிர்ந்துகொள்ள