வடக்கில் எகிறும் கொரோனா தொற்று!

You are currently viewing வடக்கில் எகிறும் கொரோனா தொற்று!

வடக்கு மாகாணத்தில் நேற்று 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் மட்டும் 20 பேருக்கு தொற்று உறுதியானது. அவர்களில் 3 பேர் தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும் நேற்றுமுன்தினம் சுன்னாகத்தில் கண்டறியப்பட்ட இலங்கை வங்கி ஊழியர் ஒருவருடன் நேரடித் தொடர்புடையவர்கள்.

இ.போ.ச கோண்டாவில் சாலையில் 2 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் சாரதி பயிற்றுவிப்பாளர், மற்றையவர் சாலை அலுவலகத்தில் பணியாற்றுபவர்.

நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேருக்கு உறுதியானது. அவர்களில் இருவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மார்ஷல் பதவியில் உள்ள நேற்று அடையாளம் காணப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள்.

மற்றையவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் பணியாற்றுபவர்.

யாழ்ப்பாணம் நகரில் கே.கே.எஸ் வீதியில் கருவாட்டுக் கடை நடத்தும் ஒருவருக்கும் தொற்று உள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் மேலும் 5 கைதிகளுக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இ.போ.ச காரைநகர் சாலையில் மேலும் 2 நடத்துனர்களுக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் தென்மராட்சி – தவசிகுளம் பகுதியை சேர்ந்தவர்.

யாழ்ப்பாணம் மாநகர எல்லையில் உள்ள இராணுவ முகாம் சிப்பாய் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனையில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த மூவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா பொது வைத்தியசாலையில் 4 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 3 பேர் வெளிநாடு செல்வதற்காக பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டவர்கள். ஒருவர் வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட போது மாதிரிகள் பெறப்பட்டவர்.

செட்டிக்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இருவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட முறிகண்டியைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் மன்னாரில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

பகிர்ந்துகொள்ள