வேகமாக பரவும் “கொரோனா”! இளையோர்களிடம் வேண்டுகோள் விடுக்கும் நோர்வே பிரதமர்!!

You are currently viewing வேகமாக பரவும் “கொரோனா”! இளையோர்களிடம் வேண்டுகோள் விடுக்கும் நோர்வே பிரதமர்!!

நோர்வேயில், நாடளாவிய ரீதியில் மிக வேகமாக பரவிவரும் “கொரோனா” பரவல் தொடர்பில், நோர்வே பிரதமர் “Erna Solberg” அம்மையார், இளையோர்களுக்கு விசேட வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அண்மைய நாட்களில் தொற்றுக்குள்ளாகியவர்களில் இளையோர்கள் அதிகமாக காணப்படுவதால், அரசு பரிந்துரைத்துள்ள நடைமுறைகளை மிகமிக இறுக்கமாக இளையோர்கள் பின்பற்ற வேண்டுமெனவும், குறிப்பாக கைகளை அடிக்கடி சவர்க்காரம் கொண்டு சுத்தம் செய்வதை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தவிரவும், சுவீடன் உள்ளிட்ட, “கொரோனா” வாழ அதிகம் பதிப்படைந்துள்ள நாடுகளில் இருந்து வருபவர்களாலேயே நோர்வேயில் “கொரோனா” பரவுகிறதெனபரப்பப்படும் தகவல்களை பெரிது படுத்துவதை மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் அம்மையார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதவேளை, பெரும்பாலான பாடசாலைகள் பகுதியாகவோ, அல்லது முழுவதுமாகவோ மூடப்பட்டிருப்பதால், இளையோர்கள் அதிகமாக பொதுவெளியிலும், நகர மத்தியிலும் அவதானிக்கப்படுவதும் கவலைக்குரியதாக பார்க்கப்படுகிறது.

தற்போதுள்ள அதீதமான தொற்று அபாயத்தை இளையோர்களுக்கு பெற்றோர்கள் புரியவைக்கும் அதேவேளையில், அனாவசியமாக பொதுவெளிகளில் திரிவதையோ அல்லது, நண்பர்களோடு கூடிக்களிப்பதையோ இளையோர்கள் தவிர்த்துக்கொள்ளும்படி பார்த்துக்கொள்வதும் பெற்றோரின் இன்றியமையாத கடமையாக இருக்கிறது.

தொற்றுதலுக்கான அறிகுறியேதும் வெளிப்படாமலேயே கிருமி காவிகளாக நாம் இருக்கக்கூடிய ஆபத்தான நிலை நிலவும்போது, நம்மையும், அடுத்தவர்களையும் பாதுகாத்துக்கொள்வது அவசியமாகிறது.

எனவே, அரச பரிந்துரைகளை கட்டுப்பாட்டோடு கடைப்பிடித்து, கைகளை அடிக்கடி சவர்க்காரம் கொண்டு சுத்தம் செய்துகொள்வதோடு, வெளியே போகவேண்டிய அவசிய சூழ்நிலை ஏற்பட்டால் தவறாது முகக்கவசம் அணிந்துகொள்வதும் மறக்கலாகாது.

பகிர்ந்துகொள்ள