75 ஆண்டுகளாக நாம் பயணித்த பாதை தவறு!பேராயர்

You are currently viewing 75 ஆண்டுகளாக நாம் பயணித்த பாதை தவறு!பேராயர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆழமான விசாரணகளை முன்னெடுத்தால் , அதனுடன் தமக்குள்ள தொடர்புகள் வெளிப்பட்டு விடும் என்ற அச்சத்தினாலேயே அரசியல் தலைவர் அது குறித்த விசாரணைகளில் கரிசணை கொள்ளாமலுள்ளனர்.

அதன் காரணமாகவே தாக்குதல்கள் இடம்பெற்று 40 மாதங்கள் கடந்துள்ள போதிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படாமலுள்ளது என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை குற்றஞ்சுமத்தினார்.

சுதந்திரத்திற்கு பின்னரான 75 ஆண்டுகளாக நாம் பயணித்த பாதை தவறு என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டிய பேராயர் , அந்த தவறால் பெற்றுக் கொண்ட படிப்பினைகள் மூலம் இனி சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஞாயிற்றுக்கிழமை (21) றாகமை – தேவத்தை தேசிய பெசிலிகா தேவாலயத்தில் வருடாந்தம் இடம்பெறும் நோயாளர்களுக்கு ஆசி வேண்டி முன்னெடுக்கப்பட்ட விசேட ஆராதனையின் போதே பேராயர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

பல தசாப்தங்களாக சுயநலமே நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. சொத்துக்கள் மீதான பேராசைக்கு அடிமையாகியுள்ளதால் கொள்கைகளைக் காட்டிக் கொடுக்கும் கலாசாரமே இன்று நடைமுறையிலுள்ளது. இதற்கு ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொண்டிருப்பது பொறுத்தமற்றது.

நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்களின் சுயநலத்தின் காரணமாகவே நாடு இன்று இந்த நிலைமையை அடைந்துள்ளது. சமூகம் என்ற ரீதியில் நாமும் அதனை அங்கீகரித்திருக்கின்றோம். ஒவ்வொரு தேர்தல்களிலும் மீண்டும் மீண்டும் ஊழல் , மோசடிக்காரர்களுக்கு வாக்களித்து அவர்களிடமே நாட்டை ஒப்படைத்துள்ளோம். எனவே இன்று ஏற்பட்டுள்ள இந்த நிலைமைக்கு நாம் அனைவரும் பொறுப்பு கூற வேண்டியவர்களாவோம்.

எனவே நாம் எமது சிந்தனையை மாற்ற வேண்டும். முறைமை மாற்றம் என்பது எம்மிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அதனை வெறும் வாய் வார்த்தைகளால் அன்றி , யதார்த்தத்தில் நடைமுறை சாத்தியமானதாக்க வேண்டும். சமூக மாற்றமடைய வேண்டியது அத்தியாவசியமானதாகும். 1956 இலிருந்து நாட்டில் இனவாதம் தூண்டப்பட்டது. சிங்களவர்கள் மாத்திரமே எனக் கூறினர். இதன் பலனாகவே மோசமான யுத்தத்தை எதிர்கொள்ள நேரிட்டது.

1948 ஆம் ஆண்டு சுதந்திரத்தின் பின்னர் அபிவிருத்தியடைந்திருக்க வேண்டிய இலங்கை , யுத்தத்தினால் இன்று ஏனைய நாடுகளிடம் கையேந்தும் நாடாகியுள்ளது. அன்று சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ , சிங்கப்பூரை இலங்கை போன்று மாற்ற வேண்டும் என்றார். ஆனால் இன்று இலங்கையின் நிலை என்ன? இந்நாட்டின் ஆட்சியாளர்களே இவ்வாறான நிலைமையை ஏற்படுத்தியுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு 40 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. இந்த தாக்குதல்களால் பாதிக்கப்பட்டோருக்கான நீதி எங்கே? 272 அப்பாவி மக்களின் உயிர்கள் வீசி எறியப்பட்டுள்ளன. இது தொடர்பில் தீர்க்கமான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு எதற்காக ஆட்சியாளர்கள் தயங்குகின்றனர்? அவ்வாறெனில் இதில் ஏதோ ஒரு இரகசியம் இருக்கிறது என்றல்லவா அர்த்தம்?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆழமான விசாரணகளை முன்னெடுத்தால் , அதனுடன் தமக்குள்ள தொடர்புகள் வெளிப்பட்டு விடும் என்ற அச்சத்தினாலேயே விசாரணைகளில் கரிசணை கொள்ளாமலுள்ளனர். கடந்த 75 ஆண்டுகளாக நாம் பயணித்த பாதை தவறானது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆட்சியாளர்களை மாற்றும் தைரியம் எமக்கு காணப்படவில்லை. எனினும் அந்த மாற்றம் அத்தியாவசியமானதாகும்.

இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக்குவதாகக் கூறினார்கள். தாமரை கோபுரம் என்ற ஒன்றை எதற்காக நிர்மாணித்தனர் எனத் தெரியவில்லை. சுபீட்சமான எதிர்காலம் எனக் கூறினர். மக்கள் ஒருவேளை உணவைக் கூட பெற்றுக் கொள்ள முடியாத நிலைமையை அடைந்துள்ளமையே இவர்களின் சுபீட்சமாகும். 75 ஆண்டுகளாக இழைத்த தவறினால் பெற்றுக் கொண்ட படிப்பினையின் மூலமேனும் நாம் இனி சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments