சிங்கள படையினரின் மனித உரிமை மீறல் ஜெனீவாவில் எடுத்துரைப்பு.!

You are currently viewing சிங்கள படையினரின் மனித உரிமை மீறல் ஜெனீவாவில் எடுத்துரைப்பு.!

“இலங்கை இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை ஓகஸ்ட் 30ஆம் திகதி உலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாளினை நினைவுகூருவதை இராணுவமும், காவல்துறையும் நீதிமன்றத்தின் ஊடாக தடைசெய்தன. இந்த செயலானது அரசின் தமிழின அழிப்பிற்கெதிரான நீதிக்காக போராடுவதை தடைசெய்ததையும் மனித உரிமை மீறல்களாகும்” என்று ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் கொரோனா வைரசின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பலத்த சுகாதார கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 14ஆம் திகதி ஆரம்பமாகி யெனீவாவில் இடம்பெற்று வருகிறது . இதில் இரண்டாவது வாரத்தில் ஐ.நா மனித உரிமைகள் சபையின் பிரதான அவையில் இடம்பெற்ற பிரிவு 3 – அனைத்து மனித உரிமைகள் உட்பட சிவில், அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் அபிவிருத்திக்கான உரிமை தொடர்பான பொது விவாதத்தில் பிரான்ஸ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பின் (Association culturelle des Tamouls en France) சார்பாக உரையாற்றி பிரபாகரன் அர்த்னா இதனைத் தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது;

“உண்மை நீதியின் சிறப்பு அறிக்கையாளர் வழங்கிய அறிக்கையில் தமிழர்களுக்கு நடந்த மனித உரிமை மீறல்களை பட்டியலிட்டதை வரவேற்கிறேன். 11 ஆண்டுகளாக ஈழத்தமிழர்கள் அமைப்பு வடிவ இனவழிப்பினை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். இராணுவ ஆக்கிரமிப்பால் புதிய இலங்கை அரசும் தொடர்ந்து தமிழர்களின் வாழ்வை அழிக்கிறது.
ஐ.நா.வின் ஆய்வில் கண்டுபிடித்ததுபோல பன்னாட்டு சட்டப்படி தமிழின அழிப்பு குற்றங்களுக்கு பொறுப்பான இராணுவ குற்றவாளிகளை பதவி உயர்வுக்கு நியமித்ததை இந்த அவைக்கு நினைவுபடுத்துகிறேன். தொண்டு நிறுவனங்களை கண்காணிக்கவும் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சுக்கு கீழ் செயல்படவும் தொண்டு நிறுவனங்களை ஒழங்குபடுத்தவும் பாதுகாப்பு அமைச்சகத்தை நியமிப்பது மிகவும் கவலையைத் தருகிறது.

சிங்கள பௌத்த தேசியத்தை அரசு பாதுகாத்து வளர்ப்பதால் ஈழத்தமிழர்கள் மேலும் ஓரங்கட்டப்படுகின்றனர். இலங்கை ஜனாதிபதியின் தொல்லியல் செயலரணியில் 6 பௌத்த துறவிகளை மேலும் சேர்த்திருக்கின்றனர். ஆனால் ஒரு தமிழரைக்கூட சேர்க்கவில்லை.

இலங்கை இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை ஓகஸ்ட் 30ஆம் திகதி உலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாளினை நினைவுகூற இராணுவமும், காவல்துறையும் நெருக்குதலுக்குள்ளாக்கி நீதிமன்றத்தின் ஊடாக தடைசெய்தன. இந்த செயலானது அரசின் தமிழின அழிப்பிற்கெதிரான நீதிக்காக போராடுவதை தடைசெய்ததையும் மனித உரிமை மீறல்களாகும்” என்று பதிவுசெய்தார்.

பகிர்ந்துகொள்ள